டாக்சி டிரைவர்களுக்கு கிளம்பிய புதிய பிரச்னை... சவாரி இல்லாமல் தவிக்கும் ஓட்டுநர்கள்...
டாக்சி டிரைவர்களுக்கு புதுரூபத்தில் வந்த ஆப்பு. டிரைவர்கள் சவாரி இல்லாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களின் அன்றாட வாழ்க்கையில் போக்குவரத்து இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. அதிலும், அரசின் பொதுபோக்குவரத்து வாகனங்களைக் காட்டிலும் அதிக பங்கினை தனியார் வாடகை வாகனங்களே வகித்து வருகின்றன. இதில், தலை சிறந்த நிறுவனங்களாக ஓலா மற்றும் ஊபர் ஆகிய கால் டாக்ஸி நிறுவனங்கள் காணப்படுகின்றன.

சில நேரங்களில் இந்நிறுவனங்களின் வாடகை வாகனங்கள் அதிக கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாக அதன் பயனர்கள் அவ்வப்போது புகாரளித்த வண்ணம் இருக்கின்றனர்.
குறிப்பாக, முகூர்த்த நாள் மற்றும் திருவிழா போன்ற பண்டிகை நாட்களில் சர்ஜ் கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளையில் அவர்கள் ஈடுபடுவதாக அப்புகார்கள் இருக்கின்றன.

ஆகையால், வாடகை வாகனங்களின் இந்த பகல் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற வகையிலான முயற்சியில் குறிப்பிட்ட சில மாநிலங்கள் ஈடுபட்டு வருகின்றன. அம்மாதிரியான ஓர் முயற்சியின் அடிப்படையில் மஹாராஷ்டிரா மாநில அரசு புதிய கட்டண கொள்கையை அம்மாநிலத்தில் செயல்படுத்தியது. இதில், சர்ஜ் கட்டணத்திற்கு ஆப்பு வைக்கின்ற வகையில் அத்திட்டம் அமைந்திருந்தது.

இதேபோன்று, ஒரு சில மாநிலங்களில் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான புதிய மீட்டர்கள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அரசாங்கங்களின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகள் தற்போது பெரும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் அவர்கள் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 வைரஸ்குறித்த பல்வேறு தகவல்கள் வலை தளங்களில் உலா வந்தம் வண்ணம் இருக்கின்றது. இதனால், மக்கள் கடுமையான பீதியில் உரைந்து நிற்கின்றனர்.
குறிப்பாக, இந்த வைரஸ் தொற்று உடையவர்கள் நம் அருகே வந்து பேசுவது, தும்புவது, இரும்பல் மற்றும் தொடுதல் ஆகிய செய்கையை செய்வதினாலே பரவிவிடும் என்று கூறப்படுகின்றது. இதனால், மக்கள் பலர் வெளியே செல்வதற்கே அச்சப்படுகின்றனர்.

மேலும், பொது இடங்களில் கூடுவதையும் தவிர்த்து வருகின்றனர். மாநில அரசுகளும் இதையேக் கடைபிடிக்குமாறு மக்களை அறிவுறுத்தி வருகின்றன.
ஆகையால், தனியார் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை அதிகபட்சம் வீட்டிலிருந்தே பணி புரியும்படி, சிறப்பு வசதிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, பலர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு, பெரும்பாலானோர் வெளியேச் செல்வதைத் தவிர்த்து வீட்டுக்குள்ளேயே இருக்கின்ற காரணத்தினால் வாடகை கார்களின் பயன்பாடு மிக வேகமாக குறைந்து வருகின்றது. முக்கியமாக பெங்களூரு, மும்பை போன்ற நகரங்களில் வாடகை வாகனங்களின் பயன்பாடு மிக கடுமையாக குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், இந்த நகரங்களில் இயங்கி வந்த வாடகை வாகனங்கள் தற்போது சவாரி இன்றி சாலையோரத்தில் முடங்கி கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதற்கு மக்களிடம் கொரோனாகுறித்து நிலவும் அச்சமே மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது. இதனால், வங்கியில் கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வரும் வாடகை வாகன ஓட்டுநர்களின் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், அவர்களால் வரும் மாதங்களில் எவ்வாறு இஎம்ஐ செலுத்த முடியும் என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.
ஆகையால், வங்கிகள் ஓரிரு மாதங்களுக்கு இஎம்ஐ பிடிப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஓட்டுநர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டு வருகின்றது.

கோவிட்-19 வைரஸின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால், பல்வேறு மாநிலங்களில் உள்ள பொது நிலையங்களான ஷாப்பிங் மால், தியேட்டர் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
குறிப்பாக, வைரஸ் அதிகம் காணப்படும் கேரளா மாநிலம் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த நிலைதான் காணப்படுகின்றது.

இதேநிலைதான் தற்போது வாடகை வாகனங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. பெங்களூருவில் மட்டும் நாளுக்கு நாள் வாடகை வாகனங்களின் பயன்பாடு மிகக் கடுமையாக குறைந்து வருகின்றது.
அந்தவகையில், கடந்த வாரங்களைக் காட்டிலும் தற்போது 40 முதல் 50 சதவீதம் வரை வணிகம் குறைந்திருப்பதாக கூறப்படுகின்றது.

அதேசமயம், வோகோ மற்றும் யூலு போன்ற வாகனங்களை வாடகை விடும் நிறுவனங்களை கொரோனா துளியளவும் பாதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. ஆகையால், இந்நிறுவனங்கள் தற்காலிக மகிழ்ச்சியில் இருக்கின்றன. ஏனென்றால், எப்போது வேண்டுமானாலும் இந்நிலை தலை கீழாக மாறிவிடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும், வைரஸ் தொற்று ஓட்டுநர்களை பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக குறிப்பிட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துமாறு ஊபர் மற்றும் ஓலா தெரிவித்துள்ளது.
முகமீடி, கிறுமி நாசினி போன்றவற்றை அவ்வப்போது பயன்படுத்து தங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கின்றது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








