கொரோனாவால் மாருதிக்கு பலத்த அடி... கார் விற்பனை பாதியாக குறைந்தது!
கொரோனா வைரஸ் பிரச்னையால் மாருதி கார் விற்பனையில் பலத்த அடி விழுந்துள்ளது. பாதி அளவு விற்பனை சரிந்துள்ளதையடுத்து, அந்நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

கொரோனோ பரவலை தடுப்பதற்காக 21 நாட்கள் தேசிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பிரச்னை ஆட்டோமொபைல் துறையை பெரிதும் ஆட்டுவித்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி கொரோனா பிரச்னையால் அதிக இழப்பை சந்தித்து வருகிறது. ஆலை மூடப்பட்டு உற்பத்தி இழப்பு, விற்பனை இழப்புகளை அந்நிறுவனம் சந்தித்து வருகிறது.

கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1,58,076 கார்களை விற்பனை செய்திருந்த அந்நிறுவனம், கடந்த மாதத்தில் 83,792 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்தைவிட கடந்த மார்ச் மாத விற்பனை 47 சதவீதம் குறைந்துவிட்டது.

உள்நாட்டில் 76,976 கார்களையும், பிற கார் தயாரிப்பு (டொயோட்டா) நிறுவனத்திற்கு 2,104 கார்களை விற்பனை செய்துள்ளதாகவும், வெளிநாடுகளுக்கு 4,712 கார்களையும் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட பாதியளவு குறைந்ததால், அந்நிறுவனம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

கடந்த மார்ச் 22ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள தனது ஷோரூம்கள் மற்றும் கார் ஆலைகளில் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது மாருதி கார் நிறுவனம். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்தது.

இந்த நிலையில், வரும் 14ந் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்த மாதமும் உற்பத்தியும், விற்பனையும் பாதியளவு நாட்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும், ஊரடங்கு விலக்கிக் கொண்டால் மட்டுமே ஓரளவு விற்பனை உயரும்.

அத்துடன், ஊரடங்கிற்கு பின்னர் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஓரிரு வாரங்கள் பிடிக்கும் என்பதால், பெரும் இழப்பை சந்திக்கும் நிலை தொடர்கிறது. எனினும், கொரோனா தொற்று பரவல் விரைவில் கட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னரே மக்கள் சகஜ நிலைக்கு திரும்புவார்கள். இந்த இழப்புகளிலிருந்து மீளும் வாய்ப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications







