கொரோனாவால் பல லட்சம் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கம்... விழி பிதுங்கி நிற்கும் டீலர்கள்!
கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக, கார், பைக் உள்ளிட்ட பல லட்சம் பிஎஸ்4 வாகனங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் உலக அளவில் நினைத்து பார்க்க முடியாத மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து வியாபார மற்றும் தொழிற்துறையும் முடங்கி இருக்கிறது.

இந்த நிலையில், இந்திய பொருளாதாரத்திலும், உற்பத்தியிலும் மிக முக்கிய பங்களிப்பை அளித்து வரும் ஆட்டோமொபைல் துறைக்கு கொரோனா தாக்கம் மிகப்பெரிய இழப்பை கொடுத்துள்ளது. அனைத்து வாகன நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. டீலர்களும் மூடப்பட்டுள்ளன.

இதனால், இந்த துறைக்கு மட்டும் தினசரி ரூ.2,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், வரும் 31ந் தேதியுடன் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்குமான காலக்கெடு முடிவடைகிறது.

கொரோனா பிரச்னையால் டீலர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வரும் 31ந் தேதி வரையிலான காலக்கெடுவுக்குள் அனைத்து பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வது இயலாத நிலை இருப்பதாக இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அண்மையில் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில், தற்போது பிஎஸ்4 எஞ்சின் பொருத்தப்பட்ட 7 லட்சம் இருசக்கர வாகனங்களும், 12,000 கார் உள்ளிட்ட பயணிகள் வாகனங்களும், 8,000 வர்த்தக வாகனங்களும் இருப்பில் தேங்கி இருப்பதாக இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு (FADA) தெரிவித்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய தேக்கமடைந்துள்ளதால், இந்திய ஆட்டோமொபைல் துறை பெரும் சிக்கலில் உள்ளது.

இந்த கூட்டமைப்பின் 26,000 டீலர்கள் அங்கம் வகிக்கின்றனர். நாடு முழுவதும் உள்ள டீலர்களில் பிஎஸ்4 எஞ்சின் கொண்ட 7.2 லட்சம் வாகனங்கள் இருப்பில் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உள்ள சூழலில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வது இயலாத காரியம் என்று தி இந்து பிசினஸ் லைன் வர்த்தக தளத்திற்கு அளித்த பேட்டியில் இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்புத் தலைவர் ஆசிஷ் கலே தெரிவித்துள்ளார்.

எனவே, தங்களது மனுவை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்து உரிய காலக்கெடு நீடிப்பு உத்தரவை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இல்லையெனில், பல டீலர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடுவை 3 மாதங்கள் நீடித்து தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் மனுதாக்கல் செய்துள்ளது.

பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு காலக்கெடு நீடிக்கப்படாவிட்டால், வாகன டீலர்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். மேலும், உச்சநீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்காவிட்டால், இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை உற்பத்தி நிறுவனங்களிடம் திரும்ப கொடுப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








