பெரிய மனசு சார்... இப்படி ஒரு சோகத்திலும் 1,500 கோடியை அள்ளி கொடுக்கும் டாடா... வெளிவந்த உண்மை...
இக்கட்டான நிலையிலும், நாட்டிற்கு 1,500 கோடியை ரூபாயை அள்ளி கொடுக்கும் டாடாவின் பெரிய மனசு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கண்ணுக்கே தெரியாத ஒரு வைரஸால் உலகமே இன்று அச்சத்தில் உறைந்திருக்கிறது. வல்லரசு என பெருமை பேசிய நாடுகள் எல்லாம் கதிகலங்கி போயுள்ளன. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 வைரஸ் இன்று மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

சீனாவை மிக கடுமையாக தாக்கிய கோவிட்-19 வைரஸ், அதன்பின் இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளை தற்போது ஒரு கை பார்த்து வருகிறது. உலக வல்லரசான அமெரிக்காவும் என்ன செய்வது? என தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறது. மேற்கண்ட நாடுகளுடன் சேர்த்து ஈரானிலும் அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.

இந்தியாவிலும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த பிரச்னையை சமாளிக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தொழில்கள் முடங்கி, பொருளாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸை எதிர்த்து போரிட தற்போது நிதியுதவி குவிந்து வருகிறது.

பெரும் தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நிதியுதவியை அறிவித்த வண்ணம் இருக்கின்றனர். எனினும் 1,500 கோடி ரூபாய் நிதியுதவி என டாடா வெளியிட்ட அறிவிப்புதான் பெரும்பாலானோரால் கவனிக்கப்பட்டது. இதற்காக முதுபெரும் தொழிலதிபரான ரத்தன் டாடாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டாடா ட்ரஸ்ட் சார்பில் முதலில் 500 கோடி ரூபாய் நிதியுதவியை ரத்தன் டாடா அறிவித்தார். ரத்தன் டாடாவின் அறிவிப்பு வெளியான உடனேயே டாடா சன்ஸ் 1,000 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்தது. கொரோனா வைரசுக்கு எதிரான போருக்கு, டாடா குழுமம் ஒட்டுமொத்தமாக 1,500 கோடி ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளது.

இந்தியா இக்கட்டான நிலையில் இருக்கும் சூழலில், டாடா குழுமம் செய்யும் இந்த பேருதவி பாராட்டத்தக்கது. அதே சமயம் டாடா குழுமத்தின் ஒரு அங்கமான டாடா மோட்டார்ஸ் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கும் சூழலில், டாடா குழுமம் இந்த உதவியை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், கொரோனா வைரஸ் எதிரொலியால் வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது.

இதனால் முன்னணி வாகன நிறுவனங்கள் பலவும் பாதிக்கப்பட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இதற்கு தப்பவில்லை. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனை கடந்த மார்ச் மாதம் 84 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பாண்டு மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டில் 11,012 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 68,727 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் எதிரொலியால் இந்த மிகப்பெரிய சரிவை டாடா மோட்டார்ஸ் சந்தித்துள்ளது. அதே சமயம் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் உள்நாட்டு பயணிகள் வாகன (Passenger Vehicle) விற்பனையானது 68 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் 5,676 பயணிகள் வாகனங்களை மட்டுமே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 17,810 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் எதிரொலியாலும், அதன் தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் வாகனங்களின் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் வாகனங்களின் விற்பனையை போலவே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனையும் மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. டாடா மோட்டார்ஸ் கடந்த மார்ச் மாதம் உள்நாட்டில் 5,336 வர்த்தக வாகனங்களை (Commercial Vehicle) மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 50,917 ஆக இருந்தது. இது 90 சதவீத வீழ்ச்சியாகும்.

கடந்த மார்ச் மாதத்தில் டாடா மோட்டார்ஸின் உள்நாட்டு விற்பனை மிக கடுமையாக சரிவடைந்திருந்தாலும் கூட, கொரோனா வைரஸ் பிரச்னை ஓயும்போது இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சரிவில் இருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விரைவாக மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.


Click it and Unblock the Notifications








