சீனர்களின் வழியை பின்பற்ற தயாராகும் இந்தியர்கள்... பெரும் அதிசயம் நிகழும் என வல்லுனர்கள் கணிப்பு...
சீனர்களின் வழியை பின்பற்ற இந்தியர்கள் தயாராகி வருவதால், பெரும் அதிசயம் நிகழும் என வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறை தடுமாறி வருகிறது. பொருளாதார மந்த நிலை, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் உள்ளிட்ட காரணங்களால், வாகனங்கள் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டது. பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வந்த பின்பு, அதாவது கடந்த ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பிரச்னையால் தற்போது நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனவே அன்றைய தினம் முதல், இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை.

அத்துடன் டீலர்ஷிப்களும் மூடப்பட்டதால், வாகன விற்பனையும் நடைபெறவில்லை. ஆனால் மத்திய, மாநில அரசுகள் தரப்பில், தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியாவில் கடந்த மே 4ம் தேதி முதல் வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டது. மேலும் டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டு வாகன விற்பனையும் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தொடங்கியது.

ஆனால் கடந்த மே மாதம் முழுக்க வாகனங்களின் விற்பனை சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய அளவில் இல்லை. கொரோனா வைரஸ் பிரச்னையால், தற்போது பண புழக்கம் குறைந்துள்ளது. எனவே எதிர்கால தேவைகளை மனதில் வைத்து முதலீடுகளை கவனமாக செய்வதிலும், சேமிப்பிலும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

எனவே வாகனங்களுக்கான தேவை குறைந்துள்ளது. சந்தையில் தேவை குறைந்தால், உற்பத்தியும் குறைவது இயல்புதான். இதன்படி முன்னணி நிறுவனங்கள் பலவும் தற்போது சந்தை சூழலுக்கு ஏற்ப உற்பத்தியை குறைத்துள்ளன. குறிப்பாக நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த மே மாதத்தில் உற்பத்தியை சுமார் 98 சதவீதம் குறைத்துள்ளது.

நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைத்து கொள்வதற்காக, கடந்த மே மாதத்தில், மாருதி சுஸுகி நிறுவனம் கார்களின் உற்பத்தியை 97.54 சதவீதம் குறைத்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த மே மாதத்தில் வெறும் 3,714 கார்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் 1,51,188 கார்களை உற்பத்தி செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களுக்கான தேவை குறைந்து விற்பனை சரிவடைந்துள்ளதால், உற்பத்தியும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் வரும் மாதங்களில் வாகன விற்பனையில் அதிசயம் நிகழும் என்று ஆட்டோமொபைல் துறையை வல்லுனர்கள் கணித்துள்ளனர். எந்த கொரோனா வைரஸால் வாகன விற்பனை சரிவடைந்ததோ, அதே கொரோனா வைரஸால் வாகன விற்பனை மீண்டும் உயரும் என்பது வல்லுனர்களின் கணிப்பு.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, எதிர்காலத்தில் மக்கள் பஸ், ரயில், ஆட்டோ, டாக்ஸி போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய தயங்கலாம் என கருதப்படுகிறது. தற்போது சில இடங்களில் மக்கள் பஸ்களில் கூட்டமாக பயணம் செய்வதை காண முடிந்தாலும், பெரும்பாலானோர் பஸ்களில் பயணிக்க தயங்குகின்றனர் என்பதே யதார்த்தம்.

எனவே அவர்கள் சொந்த கார் வாங்கும் முடிவை எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால்தான் வாகன விற்பனை மீண்டும் உயரும் என்பது வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது. தற்போது வெளியாகி வரும் ஆய்வு முடிவுகளும் கூட அதையேதான் தெரிவிக்கின்றன. கோவிட்-19 வைரஸின் தாயகம் என கருதப்பட்டு வரும் சீனாவில் தற்போதே இந்த போக்கு உணரப்பட்டு வருகிறது.

அங்குள்ள மக்கள் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு பதிலாக சொந்த வாகனங்களில் பயணிப்பதற்கே முன்னுரிமை வழங்கி வருகின்றனர். எனவே சீனாவில் வாகன விற்பனை மெல்ல மெல்ல உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய மக்களும் அதை பின்பற்றுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால், ஆட்டோமொபைல் துறை வெகு விரைவில் மீண்டு எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications







