கொரோனா வைரஸ் பிரச்னையால் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்... காசு பாக்க தயாராகும் கார் நிறுவனங்கள்...
கொரோனா வைரஸ் பிரச்னையால் மக்கள் மனதில் உருவாகியுள்ள மாற்றம், வாகன நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது கோர தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் உயிர்களை காவு வாங்கி வருவதுடன், பொருளாதார ரீதியிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அன்றைய தினத்தில் இருந்து இந்தியாவில் வாகன உற்பத்தி நடைபெறவில்லை. அத்துடன் டீலர்ஷிப்கள் மூடப்பட்டதால், வாகனங்களின் விற்பனையும் பாதிக்கப்பட்டது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் தற்போது ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகின்றன.

எனவே கடந்த மே 4ம் தேதி முதல் இந்தியாவில் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை மீண்டும் தொடங்கியது. ஆனால் வாகன விற்பனை அவ்வளவு சிறப்பாக இல்லை. கடந்த 2019ம் ஆண்டு பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், வாகன விற்பனை மிக கடுமையாக சரிந்த நிலையில், தற்போது கொரோனா பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருவதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

இந்த சூழலில் இந்தியாவில் கடந்த மே மாதத்தில் புதிய வாகன பதிவு மிக கடுமையாக சரிந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 88.87 சதவீதம் என்கிற அளவிற்கு புதிய வாகன பதிவு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதத்தில் 18,21,650 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு மே மாதம் 2,02,697 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations - FADA) தலைவர் ஆஷிஸ் ஹர்ஸராஜ் காலே கூறுகையில், ''வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல் மாதம் வாகன விற்பனை பூஜ்ஜியம் என்ற நிலைக்கு சென்றது. ஊரடங்கு படிப்படியாக தளர்ப்பட தொடங்கியதும், பல்வேறு நகரங்களில் 40 நாட்களுக்கு பின் முதல் முறையாக டீலர்ஷிப்கள் மற்றும் ஒர்க்ஷாப்கள் மீண்டும் திறக்கப்பட்டன.

மே மாத கடைசியில், இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 26,500 அவுட்லெட்களில், 60 சதவீத ஷோரூம்களும், 80 சதவீத ஒர்க்ஷாப்களும் இயங்கி தொடங்கின. தற்போது பெரும்பாலான டீலர்ஷிப்கள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் கூட ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில், தேவை மிகவும் குறைவாகவே இருந்துள்ளது'' என்றார்.

தற்போது கொரோனா வைரஸ் பிரச்னையால் பண புழக்கம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்களை வாங்குவதில் மக்களுக்கு தயக்கம் இருப்பது உண்மையே. ஆனால் இதே கொரோனா பிரச்னையால், வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணித்தால், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

எனவே சொந்த வாகனங்களில் பயணம் செய்வதையே பொதுமக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை மீண்டும் உயரக்கூடும் என ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. இந்த ஆய்வு முடிவுகள் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் வாகன டீலர்ஷிப்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








