கடைசி நேரத்தில் புதிய ட்விஸ்ட்... கார், பைக் ஷோரூம்களுக்கு அரசு அதிரடி உத்தரவு... என்னனு தெரியுமா?
கடைசி நேரத்தில் புதிய ட்விஸ்ட் ஆக, கார் மற்றும் பைக் டீலர்களுக்கு அரசு அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் தற்போது ஆட்டி படைத்து கொண்டுள்ளது. உலகம் முழுவதும் 120க்கும் அதிகமான நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதில், சீனா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள்தான் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் தற்போது வரை 6,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர 1.70 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனா வைரசுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் ஒன்று கூட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் 114 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் அடர்த்தி அதிகம் என்ற காரணிக்கு மத்தியிலும் கூட உலகின் ஒரு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு சற்று குறைவாக இருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயம். ஆனால் இங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மஹாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதனால் மத்திய அரசும், அந்தந்த மாநில அரசுகளும் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வாகன டீலர்ஷிப்களை மூடும்படி ஒரு சில மாநில அரசுகள் அதிரடியாக உத்தரவிட்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிசா மாநிலம் கஞ்சம் இதற்கு ஒரு உதாரணமாக உள்ளது.

கஞ்சம் பகுதியில் உள்ள வாகன டீலர்ஷிப்களை மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக மூடும்படி ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரிலும் ஒரு சில டீலர்களுக்கு இதேபோன்றதொரு உத்தரவை அம்மாநில அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி ஷோரூமை திறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாகன டீலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏனெனில் இந்தியாவில் பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வர இன்னும் 15 நாட்களுக்கும் குறைவான கால அவகாசமே உள்ளது. மிக கடுமையான பிஎஸ்-6 விதிகள் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன.

இதனால் தற்போது கைவசம் இருக்கும் பிஎஸ்-4 வாகனங்களின் ஸ்டாக்குகளை விற்று க்ளியர் செய்வதில் டீலர்கள் மும்முரமாக உள்ளனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவி விடுமோ? என்ற அச்சம் காரணமாக டீலர்ஷிப்களுக்கு வாடிக்கையாளர்களின் வருகை வெகுவாக குறைந்துள்ளதால், அதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் ஷோரூம்களை மூடும்படி அரசிடம் இருந்து அதிரடி உத்தரவு வந்துள்ளதால், டீலர்கள் திகைத்து போயுள்ளனர். இது குறித்து வட இந்தியாவை சேர்ந்த டீலர்ஷிப் ஊழியர் ஒருவர் கூறுகையில், 'கொரோனா வைரஸ் அச்சம் எதிரொலியாக டீலர்ஷிப்களுக்கு வாடிக்கையாளர்கள் வருவது ஏற்கனவே குறைந்து போயுள்ளது.

இதனால் பிஎஸ்-4 சரக்குகளை விற்பனை செய்யும் எங்களின் முயற்சியில் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இந்த சூழலில்தான் அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது'' என்றார். ஆனால் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA - Federation of Automobile Dealers Associations) இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








