கொரோனா எஃபெக்ட்... கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் எடுத்து வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர்!
கொரோனா வைரஸ் பாதிப்பால், கார் தயாரிப்புக்கான உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் வைத்து எடுத்து வருவதாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் வேகமாக பரவிய கொரோனா வைரஸ் உயிர்கொல்லி தொற்று நோயால், இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் கொரோனோ வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதன் தாக்கம் இப்போது உலக அளவில் எதிரொலிக்க துவங்கி இருக்கிறது. உலகின் அனைத்து முன்னணி கார் நிறுவனங்களுக்கும் பல முக்கிய உதிரிபாகங்கள் சீனாவிலிருந்துதான் பெறப்படுகின்றன.

இந்த சூழலில், அங்கு ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால், உலகின் பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் ஆலைகளுக்கு உதிரிபாகங்கள் சப்ளை தடைபட்டுள்ளது. இதனால், பல முன்னணி நிறுவனங்களின் கார் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் கீழ் செயல்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இதுகுறித்து தனது கவலையை வெளிப்படுத்தி இருக்கிறது. அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரால்ஃப் ஸ்பெத் கூறுகையில்,"அடுத்த இரண்டு வாரங்களுக்கான உதிரிபாகங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதற்கடுத்த வாரத்திற்கான உதிரிபாகங்கள் போதுமான அளவு இல்லை. சீனாவிலிருந்து கார் உதிரிபாகங்களை சூட்கேஸ்களில் வைத்து விமானம் மூலமாக எடுத்து வருகிறோம். இதன்மூலமாக, தற்காலிகமாக கார் உற்பத்தி பணிகளில் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்கிறோம். இதே நிலை நீடித்தால், நிச்சயம் கார் உற்பத்தி முடங்கும் வாய்ப்புள்ளது.," என்று தெரிவித்துள்ளார்.

சீன உதிரிபாகங்கள் சப்ளை பிரச்னையால், இங்கிலாந்து மற்றும் இந்தியாவில் செயல்பட்டு வரும் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆனால், இந்திய ஆலைகளில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என்று கருதுகிறோம் என்று டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் கன்ட்டெர் பட்செக் தெரிவித்துள்ளார்.

சீனாவில் எழுந்துள்ள நெருக்கடியான நிலையையும், கார் உற்பத்தியில் எழும் சிக்கல்கள் குறித்தும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தேவைப்பட்டால், உற்பத்தி பணிகளில் புதிய முறைகளை கடைபிடிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, ஃபியட் க்றைஸ்லர், ஜேசிபி எந்திர உற்பத்தி நிறுவனம், ஆப்பிள் ஐபோன் நிறுவனங்களும் சீன உதிரிபாகங்கள் தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கவலை தெரிவித்துள்ளன.

சீனாவில் செயல்பட்டு வரும் பல கார் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது ஆலைகளை மூடி வைத்துள்ளன. அடுத்த வாரத்தில் கார் ஆலைகளை திறக்க ஹோண்டா உள்ளிட்ட சில நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. படிப்படியாக உற்பத்தியை சீராக்குவதற்கு திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








