தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு... ஸ்தம்பித்து நிற்கும் ஆசியாவின் 'டெட்ராய்ட்'!
கொரோனா வைரஸ் பிரச்னையால் தமிழகத்தில் ஆட்டோமொபைல் துறை பெரும் இழப்பையும், பாதிப்புகளையும் சந்தித்து வருகிறது.

கொரோனா வைரஸ் பிரச்னை ஏற்படுத்தி உள்ள பொருளாதார இழப்புகள் சொல்லி மாளாத அளவு ஏற்பட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழியாக ஊரடங்கு எனும் ஆயுதத்தை அனைத்து நாட்டு அரசுகளும் கையில் எடுத்துள்ளன.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!
இந்த நிலையில், நம் நாட்டில் அமல்படுத்தப்பட்டு இருந்த 21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வர இருக்கிறது. இதனால், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அரசுகள் ஊரடங்கு காலத்தை நீட்டித்து வருகின்றன. அந்த வகையில், தமிழகத்திலும் ஊரடங்கு காலம் வரும் 30ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

ஊரடங்கு நீட்டிப்பால் அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அதேபோன்று, சிறு, குறு தொழில்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை இந்த கொரோனா பிரச்னையால் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.

இந்த நிலையில், தமிழக பொருளாதாரத்திலும், வேலை வாய்ப்பிலும் பெரும் பங்களிப்பை ஆட்டோமொபைல் துறை வழங்கி வருகிறது. குறிப்பாக, சென்னையை சுற்றி உலகின் முன்னணி கார், பைக் நிறுவனங்களும், அதன் சார்புடைய உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.

ஹூண்டாய் மோட்டார், பிஎம்டபிள்யூ, ஃபோர்டு, ரெனோ - நிஸான் உள்ளிட்ட கார் நிறுவனங்களும், ராயல் என்ஃபீல்டு, யமஹா உள்ளிட்ட இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் இங்குதான் செயல்பட்டு வருகின்றன. பாரத் பென்ஸ் உள்ளிட்ட கனரக வாகன உற்பத்தி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன.

மேலும், இந்தியாவில் 30 சதவீத நான்கு சக்கர வாகனங்கள் சென்னையில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதேபோன்று, நாட்டின் மொத்த வாகன ஏற்றுமதியில் 50 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை சென்னை பெற்றிருக்கிறது.

சென்னை மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் செயல்படும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் பல லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, சென்னையை சுற்றி உள்ள ஆலைகளில் வாகன உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 20ந் தேதி வரை ஓரளவு உற்பத்தி நடந்தது. ஆனால், இந்த மாதம் ஊரடங்கு முழுவதுமாக இருப்பதால், ஒரு வாகனம் கூட உற்பத்தி செய்ய இயலாத நிலையில் வாகன நிறுவனங்கள் உள்ளன. இதனால், பல்லாயிரம் கோடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று, இந்த நிறுவனங்களில் பணியாற்றுவோரும் பெரும் சிக்கல்களையும் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கையை வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக வாய்ப்பு இருக்கிறது. இதனால், தற்காலிக பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்படும்.

வாகன உற்பத்தி ஆலைகளை நம்பி இருக்கும் பிற வர்த்தக நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உருவாகி இருக்கிறது. சிறிய பெட்டிக் கடை முதல் போக்குவரத்து சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் வரை பெரும் பாதிப்பையும், வேலை பறிப்பு பிரச்னையையும் ஏற்படுத்தும் நிலை உருவாகி இருக்கிறது.

ஒருபுறம் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டாலும், மறுபுறத்தில் தங்களால் முயன்ற அனைத்து உதவிகளையும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. முக கவசங்கள் உற்பத்தி, வென்டிலேட்டர் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.

அடுத்த மாத மத்தியிலிருந்து கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையுடன் அனைத்து தரப்பு மக்களும், வர்த்தக ஸ்பானங்களும் காத்திருக்கின்றன. மேலும், பொருளாதார இழப்பிலிருந்து படிப்படியாக மீள்வதற்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பிரச்னையிலிருந்து சரி செய்து மீள்வதற்கு ஓர் ஆண்டுக்கு மேல் ஆகும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








