டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் மும்பை டு டெல்லி.... அசால்ட்டாக சென்று திரும்பிய இளம் தம்பதி!
மும்பையை சேர்ந்த புதுமண தம்பதி ஒன்று டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் டெல்லி சென்று திரும்பி இருக்கின்றனர். அவர்களது பயண அனுபவத்தில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எவ்வாறு ஒத்துழைப்பு கொடுத்தது, அவர்களது பயணத் திட்டம் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நிறுவனத்தின் புகழ்மிக்க மாடல்களில் நெக்ஸான் காரும் ஒன்று. இந்த காரை எரிபொருள் தேர்வில் மட்டுமின்றி மின்சார தேர்விலும் டாடா வழங்கி வருகின்றது. அந்தவகையில், சந்தையில் மின்சார தேர்வில் கிடைக்கும் டாடா நெக்ஸான் காரைப் பயன்படுத்தி புதுமண தம்பதி மும்பையிலிருந்து டெல்லி வரை சென்று மீண்டும் அங்கிருந்து இதே காரில் திரும்பி வந்திருக்கின்றனர்.

அவர்களது பயணம் குறித்து சுவாரஷ்யமான அனுபவத்தையே அவர்கள் வீடியோ வாயிலாக தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்த தகவலையே இப்பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த வீடியோவை பிளக்இன் இந்தியா எலெக்ட்ரிக் வெஹிக்கிள் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.

பதிவிற்குள் செல்வதற்கு முன் இந்த புதுமண தம்பதி ஏன் டாடா நெக்ஸான் மின்சார காரை வாங்கினார் என்பது பற்றிய தகவலைப் பார்க்கலாம். இதற்கு அவர்கள் 3 காரணங்களைக் கூறுகின்றனர். முதல் காரணம், மின்சார வாகனங்கள், பெட்ரோல், டீசல் எரிபொருள் (ஐசிஇ) வாகனங்களைப் போன்று இல்லாமல் சுற்றுச் சூழலுக்கு நண்பனாக விளங்கும். இரண்டாவது, மின்சார வாகனங்களை இயக்குவது மிக சுலபம். மூன்றாவது, அரசின் மானியம் உதவியைப் பெற முடியும்.

மேற்கூறிய காரணங்களே இந்த தம்பதி மின்சாரக் காரை தேர்வு செய்ய காரணமாக அமைந்திருக்கின்றது. இதனடிப்படையிலேயே டாடா நிறுவனத்தின் மின்சார காரை அவர்கள் வாங்கியிருக்கின்றனர். மின்சார வெர்ஷனில் தற்போது இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற கார்களைக் காட்டிலும் இக்கார் சற்று விலைக் குறைந்த காராக நெக்ஸான் இருக்கின்றது.

எனவே, இவர்கள் டாடா நெக்ஸான் இவி-யை தேர்வு செய்ய இது காரணமாக இருக்கலாம். இதுகுறித்து அவர்கள் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. சரி வாருங்கள் இவர்களின் பயணத்தில் கிடைத்த அனுபவத்தைப் பற்றி பார்க்கலாம். இதுவரை இவர்கள் செய்த பயணத்திலேயே டாடா நெக்ஸான் மின்சார காரில் பயணித்தது தனித்துவமான பயண அனுபவத்தை வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஒட்டுமொத்தமாக தங்களுடைய இந்த பயணம் மிக சிறப்பானதாக அமைந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். பயணத்திற்கு முன்னதாகவே தங்களின் சுற்றுலா பற்றிய அனைத்தையும் அட்டவணைப் போட்டு, இதன் பின்னரே அவர்கள் பயணத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

குறிப்பாக, காரின் ரேஞ்ஜ் மற்றும் அது செல்லும் தூரம் ஆகியவற்றை முன்கூட்டியே கணக்கிட்டு, எந்த வழியில் சென்றால் காரை சுலபமாக சார்ஜ் செய்ய முடியும் என்பதையும் அவர்கள் முன்னரே திட்டமிட்டிருக்கின்றனர். இதற்கேற்ப பயணத்தைத் தொடங்கியதால் இந்த தம்பதி எங்குமே சார்ஜ் பிரச்னையை சந்திக்கவில்லை.

இதுவே இவர்களின் பயணம் இனிதே நிறைவடைய காரணமாக அமைந்திருக்கின்றது. மேலும், பயண திட்டத்தைப் போடுவதற்கு முன்னர் கூகுள் மேப்-பின் உதவியுடன் கண்டறியப்பட்ட மின்வாகன சார்ஜிங் நிலையங்கள் பயன்பாட்டில் இருக்கின்றதா என அவர்கள் செய்திருக்கின்றனர். அவை செயல்பாட்டில் இருப்பதை அறிந்த பின்னரே அவர்கள் அந்த ரூட்டில் பயணிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

மும்பையிலிருந்து ஆமதாபாத் வரை ஃபாஸ்ட் சார்ஜர் நிலையங்கள் இருந்துள்ளன. அங்கிருந்து டெல்லி வரை சாதாரண சார்ஜர் கொண்ட நிலையங்கள் இருந்துள்ளன. மேலும், டாடா மோட்டார் நிறுவனமும் இவர்களது பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி இருக்கிறது. இவர்களது டாடா நெக்ஸான் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை செல்லும் வாய்ப்பை வழங்கி இருக்கிறது.

டாடா நெக்ஸான் மின்சார காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இது அராய் (ARAI) வெளியிட்ட அதிகாரப் பூர்வ தகவலாகும். இத்தகைய திறன்களைக் கொண்டே இந்த ஜோடிகள் மிக சுலபமாக டெல்லி சென்று திரும்பியிருக்கின்றனர்.

மேலும், இந்த தம்பதி டாடா நெக்ஸான் காரை மணிக்கு 60 முதல் 70 கிமீ எனும் வேகத்தில் மட்டுமே இயக்கியிருக்கின்றனர். இதனால், வீணாக பேட்டரி திறன் விரயமாவது தடுக்கப்பட்டிருக்கின்றது. இத்துடன், தேவையில்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தும் கருவிகளின் இயக்கத்தை முடக்குவதன் மூலமும் காரின் ரேஞ்ஜை அதிகரிக்கச் செய்யும்.

டாடா நிறுவனம், இந்த மின்சார காரை ரூ. 13.99 லட்சம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்கு வழங்குகின்றது. அதிகபட்சமாக ரூ. 15.99 லட்சம் வரையில் இந்த மின்சார கார் விற்கப்பட்டு வருகின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் பிற மின்சார கார்களைக் காட்டிலும் இது மிகக் குறைந்த விலை ஆகும். எனவேதான் மற்ற மின்சார கார்களைக் காட்டிலும் இதன் விற்பனை சற்று அதிகரித்துக் காணப்படுகின்றது. இக்காரில் டாடா நிறுவனம் ஜிப்ட்ரான் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியிருக்கின்றது. மேலும், 30.2 kWh லித்தியம் அயன் பேட்டரியைப் பயன்படுத்தியிருக்கின்றது.
இதன் மின் மோட்டார்கள் அதிகபட்சமாக 129 பிஎஸ் மற்றும் 245 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மேலும், இக்காரை ஏசி மற்றும் டிசி ஆகிய இரு விதமான சார்ஜிங் நிலையங்களில் வைத்தும் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








