இந்த விஷயம் தெரியுமா? லாக் டவுன் முடிஞ்ச பிறகு உங்க வீட்டிற்கு புது கார் வர சான்ஸ் இருக்கு...
லாக் டவுன் முடிந்த பிறகு, இந்தியாவில் பலரது வீடுகளுக்கு புதிய கார் வருவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது வேகமாக பரவி வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கூறப்படும், கோவிட்-19 வைரஸ் தற்போது உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.

கோவிட்-19 வைரஸ் உயிர் பலி வாங்கி வருவதுடன், பொருளாதாரத்தையும் சீர்குலைத்துள்ளது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் தற்போது ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இதனால் பல்வேறு விதமான தொழில்கள் முடங்கி போயுள்ளன. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பஸ் மற்றும் ரயில் சேவைகள் ரத்தாகியுள்ளன. மேலும் விமான சேவைகளும் முடங்கியுள்ளன. அத்துடன் வாகனங்களின் விற்பனையும் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தியா உள்பட கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது இந்த நிலைமைதான் காணப்படுகிறது.

இந்த சூழலில், பிஎம்டபிள்யூ குரூப் இந்தியாவின் வாகன விற்பனை சரிவை சந்தித்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2020 காலண்டர் ஆண்டின் முதல் காலாண்டில், பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா 12.04 சதவீத சரிவை சந்தித்துள்ளது. நடப்பாண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்), மொத்தம் 2,482 பிஎம்டபிள்யூ மற்றும் மினி கார்களை பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா டெலிவரி செய்துள்ளது.

இதில், பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 2,365. அதே சமயம் மினி இந்தியா விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 117. நடப்பு காலண்டர் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில், ஒட்டுமொத்தமாக 2,482 வாகனங்களை, பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா விற்பனை செய்துள்ளது.

ஆனால் கடந்த 2019ம் ஆண்டின் இதே கால கட்டத்தில் (ஜனவரி-மார்ச் வரையில்), பிஎம்டபிள்யூ குரூப் இந்தியா 2,822 வாகனங்களை டெலிவரி செய்திருந்தது. இது 12.04 சதவீத வீழ்ச்சியாகும். அதே நேரத்தில் பிரிமீயம் மோட்டார்சைக்கிள் செக்மெண்ட்டில், பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

பிஎம்டபிள்யூ மோட்டோராடு நிறுவனம் மொத்தம் 1,024 மோட்டார்சைக்கிள்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பிஎம்டபிள்யூ மட்டுமல்லாது, மாருதி சுஸுகி மற்றும் டாடா போன்ற பல்வேறு முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

ஆனால் ஊரடங்கு உத்தரவு தளர்த்தி கொள்ளப்பட்ட பிறகு, வாகனங்களின் விற்பனை மீண்டும் டாப் கியரில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கொரோனா அச்சம் காரணமாக, பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை மக்கள் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதற்கு பதிலாக கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணிப்பதை அவர்கள் பாதுகாப்பானதாக கருதலாம்.

எனவே ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு, பலரது வீடுகளில் புதிய கார்கள் நிற்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய கார்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், விற்பனையை மீண்டும் மீட்டெடுத்து விட முடியும் என்ற நம்பிக்கையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








