கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் எடுக்கும் திடீர் முடிவு... அவங்க காட்ல இனி பண மழை கொட்ட போகுது...
கொரோனா அச்சத்தால் இந்தியர்கள் திடீர் முடிவு ஒன்றை எடுத்து வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போதைக்கு நம்மை விட்டு பிரிந்து செல்வதாக இல்லை. கொரோனா வைரஸ் இன்னும் நீண்ட காலத்திற்கு இருக்கும் எனவும், இதனால் நாம் அதனுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் எனவும் வெளியாகி வரும் தகவல்கள் உலக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக மக்கள் மேற்கொள்ள தொடங்கி விட்டனர். முக கவசம் அணிவது, க்ளவுஸ் அணிவது போன்ற செயல்பாடுகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. அத்துடன் அடிக்கடி கைகளை கழுவும் பழக்கமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதெல்லாம் இதற்கு முன்பு நம்மிடம் பெரிதாக இல்லாத பழக்க வழக்கங்கள். இதனால் கொரோனா வைரஸ் உலக மக்களின் வாழ்க்கையை தலைகீழாக திருப்பி போட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இங்கே கூறப்பட்டுள்ளவை எல்லாம் சிறு சிறு உதாரணங்கள் மட்டுமே. இனிமேல்தான் நாம் மிகப்பெரிய மாற்றங்களை எல்லாம் பார்க்கவுள்ளோம்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரித்து கொண்டே வந்தாலும், மறுபக்கம் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை பஸ், ரயில், விமானம் போன்ற பொது போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் ஆயத்தமாகி வருகின்றன.

அதேபோல் ஆட்டோ, டாக்ஸி போன்ற மற்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கும் படிப்படியாக அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனினும் பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிக்க முன்பு போல மக்கள் ஆர்வம் காட்டுவார்களா? என்பதில் பெரிய சந்தேகம் நிலவுகிறது. கொரோனா தொற்றி விடும் என்ற அச்சத்தால், சொந்த வாகனங்களில் பயணிக்கவே மக்கள் விரும்புவார்கள் என கூறப்படுகிறது.

எனவே கார் நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளன. மக்களிடம் காணப்படும் கொரோனா அச்சம் காரணமாக, கார் விற்பனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அடுத்தடுத்து வெளியாகி வரும் தகவல்களே இதற்கு காரணம். ஊரடங்கு காரணமாக விற்பனை முடங்கியதால் துவண்டு போயிருந்த கார் நிறுவனங்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது வெளிவந்துள்ள ஒரு புதிய ஆய்வு, கார் நிறுவனங்களின் மகிழ்ச்சியை அப்படியே இரட்டிப்பாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சொந்தமாக கார் வைத்திருப்பதை அதிக அளவிலான இந்தியர்கள் விரும்புவது இந்த ஆய்வில் தெரிய வந்திருப்பதுதான், கார் நிறுவனங்களின் மகிழ்ச்சிக்கு காரணம்.

வரும் மாதங்களிலும் கொரோனா வைரஸ் பிரச்னை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தங்களுக்கு என சொந்தமாக ஒரு கார் வைத்திருப்பதை நகர்ப்புறங்களில் வசிக்கும் இந்தியர்கள் அதிகளவில் விரும்புவதாக இப்சோஸ் (Ipsos) நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. இப்சோஸ் என்பது மிகவும் பிரபலமான மார்க்கெட் ரிசர்ச் நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கார் வாங்கும் நோக்கம் உடையவர்களில் குறைந்தபட்சம் 40 சதவீதம் பேர், கொரோனா வைரஸ் பிரச்னைக்கு பிறகு, பழையது அல்லது புதியது என ஏதேனும் ஒரு காரை வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில் கார் வாங்கும் நோக்கம் உடையவர்களில் 31 சதவீதம் பேருக்கு, கார் வாங்குவதற்கான நோக்கத்தில் எவ்விதமான மாற்றமும் இல்லை.

முன்பு போலவே அவர்கள் கார் வாங்க விரும்புகின்றனர். அதே நேரத்தில் 29 சதவீதம் பேர் எச்சரிக்கையுடன் பயணம் செய்வதாகவும், அவர்கள் பழைய அல்லது புதிய காரை வாங்குவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் வாங்கும் நோக்கம் இருந்தாலும் கூட, பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பொது போக்குவரத்தையே பயன்படுத்தியாக வேண்டிய கட்டாயம் சிலருக்கு இருக்கலாம்.

எப்படியாயினும் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள் கார் வாங்குவதற்கு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அச்சமே தற்போதைக்கு முக்கிய காரணமாக இருக்கும். ஊரடங்கு காரணமாக சோர்ந்து போயிருந்த கார் உற்பத்தி நிறுவனங்கள், கார் டீலர்ஷிப்களுக்கு இது உண்மையிலேயே மகிழ்ச்சியான செய்திதான். கொரோனா அச்சத்தால், புதிய கார் வாங்க நீங்கள் விரும்பினால் அதை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








