ஆட்டி படைக்கும் கொரோனா... படுமோசமான நிலைக்கு சென்ற பாகிஸ்தான்... இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா?
கொரோனா வைரஸ் எதிரொலியால் பாகிஸ்தான் படுமோசமான நிலைக்கு சென்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் (கோவிட்-19) தற்போது உலகையே உலுக்கி எடுத்து வருகிறது. கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதால், உலக மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதவிர பொருளாதார ரீதியாகவும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக விமான போக்குவரத்து துறை மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பலத்த அடி வாங்கியுள்ளன. சர்வதேச அளவிலும், உள்நாட்டு அளவிலும் விமானங்களை இயக்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை காரணமாக பல்வேறு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுதவிர கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா துறையும் முடங்கியுள்ளது.
MOST READ: பருவமழை கொட்டபோகுது... வண்டி மேல கொஞ்சம் அக்கறை காட்டுங்க... என்ன பண்ணனும்னு தெரியுமா?

கொரோனா வைரஸால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட மற்ற துறைகளில் ஆட்டோமொபைல் துறை மிகவும் முக்கியமானது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் வாகன உற்பத்தி அடியோடு முடங்கியது. அத்துடன் டீலர்ஷிப்களும் மூடப்பட்டதால், வாகன விற்பனையும் சரிவை சந்தித்துள்ளது.

குறிப்பாக கொரோனா வைரஸ் காரணமாக பாகிஸ்தானில் ஆட்டோமொபைல் துறை அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது. பாகிஸ்தான் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 39 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த 39 வாகனங்களும் லாரி அல்லது பேருந்துகள்தான். அதாவது ஒரு பயணிகள் வாகனங்கள் கூட விற்பனையாகவில்லை.

பாகிஸ்தானில் கடந்த 2019ம் ஆண்டில் இருந்தே ஆட்டோமொபைல் துறை இறங்கு முகத்தில்தான் உள்ளது. தற்போது கொரோனா வைரசும் உடன் சேர்ந்து கொண்டு, ஆட்டோமொபைல் தொழில் துறையை உலுக்கி எடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஜிடிபி-யில் ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு சுமார் 4 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் உள்ள முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கொரோனா அச்சம் காரணமாக கடந்த மார்ச் 23ம் தேதியில் இருந்து வாகன உற்பத்தியை நிறுத்தியதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானிலும் கடந்த மே 11ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஆட்டோமொபைல் துறை இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. பாகிஸ்தானை போலவே இந்தியாவிலும் கடந்த 2019ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆட்டோமொபைல் துறை திணறி கொண்டுதான் உள்ளது. இங்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

எனவே அன்றைய தினம் தொழிற்சாலைகளில் வாகன உற்பத்தி முடங்கியது. மேலும் டீலர்ஷிப்களும் இழுத்து மூடப்பட்டன. கொரோனா வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையிலும், இந்தியாவில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. எனவே இந்தியாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பின், கடந்த மே 4ம் தேதி முதல் வாகன உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

த்துடன் ஷோரூம்களும் மீண்டும் திறக்கப்பட்டன. இங்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகள் மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவிலும் வாகன விற்பனை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. அதற்கு இன்னும் நீண்ட நாட்கள் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கொரோனா அச்சம் காரணமாக பொது போக்குவரத்திற்கு பதில், மக்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை பாதுகாப்பானதாக கருதலாம் என கூறப்படுகிறது. இதன் காரணமாக கார் உள்ளிட்ட வாகனங்களின் விற்பனை அதிகரிக்கலாம் என்பதால், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சற்று நம்பிக்கையுடன் உள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








