பாவம்ல... கொரோனா வைரஸ் இந்தியாவில் இப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தியதை யாராச்சும் கவனிச்சீங்களா?
உயிர்களை காவு வாங்குவதுடன் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு பாதிப்புகளையும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸால் (கோவிட்-19 வைரஸ்) உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கோவிட்-19 வைரஸால் தற்போது வரை 17,234 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3,95,579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அதிகாரப்பூர்வமாக மருந்து கண்டுபிடிக்கப்படாததால், மனித குலத்திற்கே கோவிட்-19 பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ஆனால் மறுபக்கம் 1,03,732 பேர் கோவிட்-19 வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்திருப்பது கொஞ்சம் நிம்மதி தருகிறது. எனினும் அலட்சியம் காட்டாமல் மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. கோவிட்-19 வைரஸ் உயிர்களை பறிப்பதுடன், தொழில்களையும் நசுக்கி வருகிறது. இதில், ஆட்டோமொபைல் துறையும் ஒன்று.

குறிப்பாக இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையை மிகவும் மோசமானதொரு தருணத்தில் கோவிட்-19 வைரஸ் தாக்கியுள்ளது. இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் மிகவும் கடுமையான பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வருகின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, இந்தியாவில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் பிஎஸ்-6 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யவும், பதிவு செய்யவும் முடியும்.

எனவே ஏப்ரல் 1ம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்படாவிட்டால், பிஎஸ்-4 ஸ்டாக்குகள் பயனற்றாக மாறி விடுவதற்கான அபாயம் உள்ளது. இதனால் பிஎஸ்-4 ஸ்டாக்குகளை க்ளியர் செய்யும் பணிகளில் டீலர்கள் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். பிஎஸ்-4 வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

இப்படிப்பட்ட சூழலில்தான் கோவிட்-19 வைரஸ் இந்தியாவை தாக்கியுள்ளது. தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருக்கும் வாகன ஷோரூம்கள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. மார்ச் 31ம் தேதி வரை அவை மீண்டும் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே பிஎஸ்-4 ஸ்டாக்குகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பிஎஸ்-4 விதிமுறைகளுக்கு இணக்கமான டூவீலர்கள், கார்கள், பஸ்கள் மற்றும் லாரிகள் இன்னும் கணிசமான எண்ணிக்கையில் டீலர்களிடம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியாவின் மிகப்பெரிய டூவீலர்கள் உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் மிகப்பெரிய பஸ் மற்றும் லாரி உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் டாடா ஆகிய நிறுவனங்களிடம் இன்னமும் கணிசமான எண்ணிக்கையில் பிஎஸ்-4 ஸ்டாக்குகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், ஹீரோ நிறுவனம் ஒரு மாதத்திற்கு மட்டும் 4.5-5 லட்சம் மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது. ஆனால் கைவசம் உள்ள பிஎஸ்-4 ஸ்டாக்குகளின் எண்ணிக்கையை ஹீரோ தெளிவுபடுத்தவில்லை.

எனினும் பிப்ரவரி மாத தொடக்கத்தில் ஹீரோ நிறுவனத்திடம் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருந்தன. இதில், பெரும்பாலானவை பிஎஸ்-4 வாகனங்கள்தான். அதே சமயம் கடந்த ஜனவரி மாத கடைசியில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் 7,500 பிஎஸ்-4 கார்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயம் குறிப்பிடப்படாத எண்ணிக்கையில் பிஎஸ்-4 லாரிகள், பஸ்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் டாடா நிறுவனத்திடம் ஒட்டுமொத்தமாக இருக்கும் விற்பனையாகாத பிஎஸ்-4 வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. பிஎஸ்-4 ஸ்டாக் க்ளியரன்ஸில் கோவிட்-19 வைரஸ் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் கூடுதல் கால அவகாசத்தை வழங்குவது தொடர்பாக தற்போது வரை எவ்விதமான முடிவையும் அரசு அறிவிக்கவில்லை. ஆனால் வாகன உற்பத்தி நிறுவனங்களும், வாகன டீலர்களும் கூடுதல் அவகாசத்தை எதிர்பார்த்து கொண்டுள்ளனர். இந்த இக்கட்டான நேரத்தில் அரசாங்கம் என்ன முடிவு எடுக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்பட்டால், அங்கு பணியாற்றும் ஊழியர்களும், அது தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








