ஃபேம்லியோட கேக் வெட்டி கார் டெலிவரி எடுத்த காலம் போச்சு... சின்ன சின்ன சந்தோஷத்தை பறித்த கொரோனா
குடும்பத்துடன் ஆரவாரமாக கேக் வெட்டி புதிய காரை டெலிவரி எடுப்பது போன்ற மக்களின் சின்ன சின்ன சந்தோஷங்களை எல்லாம் கொரோனா பறித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கொரோனா வைரஸால் (கோவிட்-19), அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. இந்தியாவிலும் கோவிட்-19 வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கோவிட்-19 வைரசுடன் வாழ பழகி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடைந்திருக்க வேண்டிய இந்த ஊரடங்கு கோவிட்-19 வைரஸ் கட்டுக்குள் வராததால், மே 3 மற்றும் மே 17 வரை என நீட்டிக்கப்பட்டு கொண்டே செல்கிறது. மே 17ம் தேதியுடனும் ஊரடங்கு முடிவடைய போவதில்லை.

அதற்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ஆனால் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தற்போது ஊரடங்கில் ஒரு சில தளர்வுகளை அரசு வழங்கி வருகிறது. இதன் காரணமாக ஆட்டோமொபைல் துறை தற்போது படிப்படியாக செயல்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வாகன உற்பத்தி நடைபெறவில்லை. ஷோரூம்கள் மூடப்பட்டதால், வாகன விற்பனையும் நடைபெறவில்லை. ஆனால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால், இந்தியாவில் ஆட்டோமொபைல் டீலர்ஷிப்கள் சுமார் 40 நாட்களுக்கு பிறகு, கடந்த மே 4ம் தேதியன்று திறக்கப்பட்டன.

இதன் மூலமாக நாட்டின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி கடந்த வாரத்தில் 1,600க்கும் மேற்பட்ட கார்களை டெலிவரி செய்துள்ளது. அதே சமயம் அதன் போட்டி நிறுவனமான ஹூண்டாய் 608 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில், பெரும்பாலான வாகனங்கள் ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக புக்கிங் செய்யப்பட்டவை.

ஆனால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டதால், வாகனங்கள் டெலிவரி செய்யப்படவில்லை. வாகன விற்பனை தற்போது தொடங்கப்பட்டிருந்தாலும் கூட, ஆட்டோமொபைல் துறையின் முகமே மாறியுள்ளது. மிகவும் கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றிதான் ஆட்டோமொபைல் துறை மீண்டும் இயங்க தொடங்கியுள்ளது.

வாகன உற்பத்தி தொழிற்சாலைகளிலும், டீலர்ஷிப்களிலும் அரசு வகுத்து கொடுத்துள்ள பாதுகாப்பு விதிகள் தீவிரமாக பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக மாருதி சுஸுகி கார் நிறுவனம் இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளது. முன்பெல்லாம் கார்களை டெலிவரி எடுக்கும்போது, வாடிக்கையாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபவதை பார்க்க முடியும்.

அத்துடன் டீலர்ஷிப்களுக்கு குடும்பம் சகிதமாக படையெடுத்து வருவார்கள். வாகன நிறுவனங்களும் ஒரு சில சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி கார்களை டெலிவரி கொடுக்கும். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வாகனங்களை டெலிவரி எடுக்கும் நிகழ்வுகள் கொண்டாட்டமாக நடப்பதில்லை. அதேசமயம் பாதுகாப்பு விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகின்றன.

குஜராத் மாநிலத்தில் மாருதி சுஸுகி காரை சமீபத்தில் டெலிவரி எடுத்த ஒருவரின் கதையை உங்களுக்கு சொல்கிறோம். அவர் டெலிவரி எடுப்பதற்காக, அவர் தனியாகதான் சென்றார். ஷோரூம் வாசலிலேயே தெர்மல் ஸ்க்ரீன் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டார். அத்துடன் கைகளை சுத்தம் செய்து கொள்வதற்காக அவருக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது.

இதன்பின் மாஸ்க் அணிந்த ஷோரூம் ஊழியர் அவரிடம் சாவியை ஒப்படைத்தார். இதுகுறித்து அந்த கஸ்டமர் கூறுகையில், ''கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, காரை டெலிவரி எடுப்பதற்கு, என் குடும்பத்தினரால் என்னுடன் வர இயலவில்லை. எனக்கு மூன்று மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் பயணம் செய்வது கடினமாக உள்ளது'' என்றார்.

கொண்டாட்டங்கள் இல்லாவிட்டாலும் கூட, தற்போது பாதுகாப்புதான் மிகவும் முக்கியமான ஒன்று. ஷோரூம் பணியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறது. முடிந்த அளவிற்கு அவர்களுக்கு இடையே பிஸிக்கல் கான்டாக்ட் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. ஒன்று பிஸிக்கல் கான்டாக்ட் அறவே தவிர்க்கப்படுகிறது. அல்லது கூடுமான வரையில் குறைக்கப்படுகிறது.

வாகனங்களை வாங்க சாத்தியமுள்ள வாடிக்கையாளர்கள் லாக்டவுன் காலகட்டத்தில், கார் நிறுவனங்கள் தொடர்பு கொண்டு பேசின. அப்போது ஷோரூம்களுக்கு வருவதற்கும் மற்றும் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கும்தான் பல்வேறு வாடிக்கையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். எனவே இதற்கு ஏற்பவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வாகன நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.

இது தொடர்பாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கூறுகையில், ''டீலர்ஷிப்களில் டாக்குமெண்ட் டிராப் பாக்ஸ் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்சூரன்ஸ் மற்றும் வாகன பதிவு ஆவணங்கள் பரிமாற்றத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுமான வரை ஆவணங்கள் பரிமாற்றத்தை மெயில் மூலமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிஸிக்கல் கான்டாக்ட் இல்லாமல் செய்ய முடியும்'' என்றனர். கொரோனா அச்சம் காரணமாக வரும் நாட்களில், வாகன விற்பனையில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல், தற்போதே பல்வேறு புதுமைகள் அரங்கேற தொடங்கியுள்ளன.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








