சூப்பர்... உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள கம்பெனியின் அதிரடி அறிவிப்பால் இந்திய டாக்டர்கள் நெகிழ்ச்சி
முன்னணி நிறுவனம் ஒன்று, இந்திய டாக்டர்களுக்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொரோனா வைரஸால் (கோவிட்-19) பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க முடியாமல், உலகின் முன்னணி நாடுகள் கடுமையாக திணறி வருகின்றன. இதற்கு உலக வல்லரசான அமெரிக்கா மிகச்சிறந்த உதாரணம். அமெரிக்கா மட்டுமல்லாது உலகின் மற்ற நாடுகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை, கோவிட்-19 வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது. கோவிட்-19 வைரஸை எதிர்த்து போரிடுவதற்காக, அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்து வருகின்றன. இதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த வகையில் உள்ளது.

கோவிட்-19 வைரஸை எதிர்த்து போரிட, வென்டிலேட்டர்கள் அதிகம் தேவைப்படுகின்றன. எனவே அவற்றை அதிகளவில் உற்பத்தி செய்யும் பணியில், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன. இதுதவிர நிதியுதவிகளையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வாரி வழங்கி கொண்டுள்ளன.

இந்தியாவிலும் ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்களிப்பு சிறப்பாக இருக்கிறது. கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இந்தியாவில் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களின் விற்பனை மிக கடுமையாக சரிந்துள்ளது. இருந்தபோதும் கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்றன.

இதில், எம்ஜி மோட்டார் நிறுவனமும் ஒன்று. கோவிட்-19 வைரஸ் பொருளாதார ரீதியாகவும் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள் நிறுவனங்கள் ஆட் குறைப்பு மற்றும் ஊதியம் குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆனால் பணியாளர்களின் வேலையை பறிக்க மாட்டோம் என எம்ஜி மோட்டார் இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு அதிரடி அறிவிப்பை எம்ஜி மோட்டார் இந்தியா வெளியிட்டுள்ளது. இதன்படி டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் ஆகியோரின் பயன்பாட்டிற்காக எம்ஜி மோட்டார் இந்தியா 100 கார்களை வழங்கவுள்ளது. இதற்கான அறிவிப்பை எம்ஜி மோட்டார் இந்தியா நேற்று (ஏப்ரல் 22) வெளியிட்டுள்ளது.

எம்ஜி மோட்டார் இந்தியா வழங்கவிருப்பது ஹெக்டர் கார்கள் ஆகும். எஸ்யூவி ரக காரான இது, இந்தியாவில் மிகவும் பிரபலமான மாடல்களில் ஒன்றாக உள்ளது. வரும் மே மாதம் வரை இந்த சேவை வழங்கப்படும் என எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அனைத்து கார்களும் எரிபொருள் மற்றும் டிரைவர்களுடன் வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகின்ற டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் அரசு அதிகாரிகள் பாதுகாப்பாக பயணம் செய்வதை உறுதி செய்யும் விதமாக எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் டீலர்கள் மூலமாக, மாநில அரசுகளின் விதிமுறைகளின்படி கார்கள் சப்ளை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. இந்தியா மட்டுமல்லாது இங்கிலாந்திலும் எம்ஜி மோட்டார் நிறுவனம் இப்படியான ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது.

கோவிட்-19 வைரஸை எதிர்த்து போரிடுவதற்காக, இங்கிலாந்து முழுவதும் என்ஹெச்எஸ் ஏஜென்சிகளுக்கு, 100 கார்களை வழங்குவதற்கு, எம்ஜி மோட்டார் யுகே நிறுவனம் முன்வந்துள்ளது. இங்கிலாந்தில் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார்கள் வழங்கப்படுகின்றன. எம்ஜி நிறுவனத்தின் இஸட்எஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவிலும் பிரபலமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








