மிக குறைவான விலையில் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்... டிசி களமிறக்குகிறது!
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை டிசி டிசைன் நிறுவனம் களமிறக்க உள்ளது. மிக சவாலான விலையில் இந்த புதிய கார் மாடலை அறிமுகப்படுத்த டிசி டிசைன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் டிசி நிறுவனம் கார்களை கஸ்டமைஸ் செய்து தருவதில் மிகவும் பிரபலமானது. சினிமா நட்சத்திரங்கள், பெரும் கோடீஸ்வர்களின் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் கச்சிதமாக பூர்த்தி செய்யும் வகையில் மிக சொகுசான வகையில் கார்களை கஸ்டமைஸ் செய்து இந்தியர்களை வசியம் செய்து வைத்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய இந்தியாவின் முதல் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை களமிறக்கியது. அவந்தி என்ற பெயரில் மிக சவாலான விலையில் வந்த அந்த கார் விற்பனையில் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாவிட்டாலும், இந்தியர்களின் தொழில்நுட்ப வல்லமையை பரைசாற்றும் விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்த காரில் ரெனோ நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போ எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. சில குறைகள் இருந்தாலும், முதல் கார் மாடலை ஓரளவு நன்றாகவே வடிவமைத்து மார்க்கெட்டில் தனது இமேஜை உயர்த்திக் கொண்டது டிசி நிறுவனம். பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் காரணமாக, அவந்தி உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், நிதி நெருக்கடியில் சிக்கிய டிசி நிறுவனம் தற்போது அதிலிருந்து மீண்டும் டிசி2 என்ற பெயரில் மீண்டும் வர்த்தகத்தை துவங்கி இருக்கிறது. இந்த நிலையில், எவோ இந்தியா பத்திரிக்கைக்கு சமூக வலைதளம் மூலமாக டிசி நிறுவனத்தின் ஸ்தாபகர் திலீப் சாப்ரியா பேட்டி அளித்தபோது, பல முக்கியத் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலின்போது அவர் கூறியிருப்பதாவது,"அவந்தி காருக்கு மாற்றாக புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை நிலைநிறுத்த இருக்கிறோம். இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் டிசிஏ கான்செப்ட் அடிப்படையிலான மாடலாக இருக்கும்.

தற்போது உருவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த காரின் சேஸீ மற்றும் பாடி உள்ளிட்டவை தயாராக உள்ளன. இந்த காரின் இன்டீரியர் வடிவமைப்பும் நடந்து வருகிறது. மேலும், பேட்டரி மற்றும் மின் மோட்டார் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணிகள் சுவிட்சர்லாந்தில் நடந்து வருகிறது. மிகச் சிறப்பான செயல்திறனை கொண்ட கார் மாடலாக இருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

டிசி அவந்தி காருக்கு 53 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இந்த நிலையில், மின்சார கார்களுக்கு அரசாங்க சலுகைகள் உள்ளதுடன், 5 சதவீத வரி மட்டுமே போடப்படுவதால், இந்த காரின் விலையை மிக சவாலாக நிர்ணயிக்க முடியும் என்று டிசி கருதுகிறது.

ரூ.40 லட்சம் விலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு டிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த கார் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதால், விலையை நிர்ணயிப்பதற்கு தோதுவான விஷயமாக இருக்கும்.

இந்த கார் உருவாக்கப் பணிகள் திட்டமிட்டபடி முடிந்தால், வரும் 2022ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வந்துவிட முடியும் என்று திலீப் சாப்ரியா தெரிவித்துள்ளார். இது தனித்துவமான மின்சார கார் மாடலாக இந்தியர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








