டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ ரத்து... கண்காட்சி அரங்கம் கொரோனா சிகிச்சை மையமாகிறது!
கொரோனா பிரச்னையால், வரும் ஜூன் மாதம் அமெரிக்காவில் நடக்க இருந்த டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

கொரோனா வைரஸ் பிரச்னையால் உலக அளவில் பல்வேறு பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் வழக்கமான நடைபெறும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான அமெரிக்காவில் நடக்கும் டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

வழக்கமாக ஜனவரி மாதத்தில்தான் டெட்ராய்டு ஆட்டோ ஷோ நடத்தப்பட்டு வந்தது. டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போவில் உலகின் பல முன்னணி வாகன நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். இதனால், உலக அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டோமொபைல் கண்காட்சியாக கருதப்படும்.

மேலும், அமெரிக்காவில் உள்ள மக்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மட்டுமின்றி, உலக அளவில் இந்த கண்காட்சியை காண்பதற்கு பல ஆயிரம் பேர் வருகை தருவது வழக்கம்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கொரோனா பிரச்னையால் முதல்முறையாக ஜூன் மாதம் நடக்க இருந்த டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்படும் டிசிஎஃப் கண்காட்சி மையம் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தற்காலிகமாக மையமாக பயன்படுத்தப்பட இருக்கிறது.

இதுகுறித்து டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ ஏற்பாட்டு அமைப்பின் உயர் அதிகாரி ராட் ஆல்பர்ட்ஸ் இ மெயில் மூலமாக வெளியிட்டு அறிக்கையில்,"கொரோனாவால் ஏற்பட்டுள்ள இந்த தருணம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. குடி மக்களின் பாதுகாப்பு, உடல்நலனைவிட பெரிய விஷயம் ஏதும் இல்லை. கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு எங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பையும் சமூகத்திற்கு வழங்க இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டெட்ராய்டு ஆட்டோ ஷோவானது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஜனவரிக்கு பின்னர் இரண்டரை ஆண்டுகள் கழித்து டெட்ராய்டு ஆட்டோ எக்ஸ்போ நடத்தப்பட உள்ளது.

2020ம் ஆண்டுக்கான டெட்ராய்டு ஆட்டோ ஷோவிற்காக விற்பனை செய்யப்பட்ட நுழைவு சீட்டுகளுக்கான கட்டணம், அரங்க கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் முழுமையாக திருப்பி வழங்கப்படும் என்று ஏற்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








