ஆசியாவில் முதல்முறையாக... பொது சாலைகளில் ரோபோ டாக்சிகள் சோதனை ஓட்டம்!
ஆசிய கண்டத்தில் முதல்முறையாக ரோபோ டாக்சிகள் பொது சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பான முழுமையான விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

ஓட்டுனர் துணை இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை உருவாக்கும் ஆராய்ச்சிகள் உலக அளவில் நடந்து வருகின்றன. வாகன நிறுவனங்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜாம்பவான் நிறுவனங்களும் வாகனங்களுக்கான தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றன.

சில நிறுவனங்கள் தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட வாகனங்களை பொது சாலைகளில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றன. ஆனால், நகர்ப்புறத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்துவதற்கு குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில், லெவல்-5 எனப்படும் மேம்பட்ட தானியங்கி தொழில்நுட்பம் கொண்ட கார்களை அலிபாபா நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆட்டோஎக்ஸ் நிறுவனம் சோதனை ஓட்டம் நடத்தி வருகிறது.

சீனாவிலுள்ள சென்ஸென் நகரில் பொது சாலைகளில் வைத்து இந்த ரோபோ டாக்சிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. ஆசியாவில் முதல்முறையாக லெவல் 5 தானியங்கி தொழில்நுட்பம் கொண்டதாக இந்த ரோபோ டாக்சி சோதனைத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

சோதனை ஓட்டம் தொடர்பாக வீடியோ ஒன்றையும் ஆட்டோஎக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், சாலையோரம் விதிமீறி நிறுத்தப்பட்டு இருக்கும் கார்கள், டிரக்குகளை அடையாளம் கண்டு பாதுகாப்பாக இந்த தானியங்கி தொழில்நுட்பம் இயக்குவது ஆகச் சிறந்த விஷயமாக பார்க்கப்படுகிறது.
அதேபோன்று, சாலையை கடக்கும் பாதசாரிகள், சாலை கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள பாதுகாப்பற்ற யூ-டர்ன் எடுக்க வேண்டிய இடங்களையும் துல்லியமாக கண்டறிந்து முன்னேறி செல்கிறது.

இதுவரை நெடுஞ்சாலைகளில் செல்வதற்கான தானியங்கி தொழில்நுட்பங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், நகர்ப்புறத்தில் உள்ள சிக்கல்கள், பாதுகாப்பை கருத்தில்கொண்டு அனுமதிக்கப்படவில்லை. ஆனால், தற்போது இந்த ஆட்டோஎக்ஸ் ரோபோ டாக்சி சிறப்பாக அனைத்து சூழல்களையும் கையாள்வதால் ஓர் முழுமையான தானியங்கி வாகனத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வேமோ நிறுவனம் பயன்படுத்தும் அதே ஃபியட் க்றைஸ்லர் பசிபிக்கா என்ற கார் மாடல்களையே, ஆட்டோஎக்ஸ் நிறுவனமும் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்த கார்களில் அதி உயர்தரத்தில் பதிவுகளை வழங்கும் கேமராக்கள், ரேடார் சிஸ்டம், ஆபத்துக்களை முன்கூட்டியே கண்டறிந்து செயல்படுவதற்கான சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த சோதனை ஓட்டங்கள் வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்த சில ஆண்டுகளில் சீனாவின் டாக்சி போக்குவரத்தில் இந்த ரோபோ டாக்சிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதைத்தொடர்ந்து, பிற நாடுகளிலும் இந்த கார்கள் விரைவாக பயன்பாட்டிற்கும் கொண்டு வர அனுமதி பெற முடியும்.


Click it and Unblock the Notifications








