கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.50 கோடி நிதி உதவி: ஐஷர் அறிவிப்பு!
கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத் திட்டங்களுக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான ஐஷர் குழுமம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் முயற்சிகளில் வாகன நிறுவனங்கள் தீவிரமாக களமிறங்கி உள்ளன. மாருதி, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் முக கவசம் மற்றும் வென்டிலேட்டர் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இதேபோன்று, அனைத்து வாகன நிறுவனங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிதி உதவி மற்றும் இதர உதவிகளை செய்து வருகின்றன. அந்த வகையில், வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கும் ஐஷர் குழுமம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.50 கோடி நிதி உதவியை அறிவித்துள்ளது.

மருத்துவ உபகரணங்கள், சிகிச்சை மையங்கள் அமைப்பது உள்ளிட்டவற்றிற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும். சிக்கலான இந்த நேரத்தில் இருந்து மீண்டு வருவதற்கு இந்த நிதி உதவி சிறப்பானதாக இருக்கும்.

அடுத்து வரும் மாதங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து கூடுதல் நிதி அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஐஷர் குழுமம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீல்வதற்கான நீண்ட கால மறுபுனரமைப்பு திட்டங்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தேவையான உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்குவதற்கு அதிக கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கிருமி நாசினி மற்றும் தூய்மை நடவடிக்கைகளுக்காகவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

தற்போது முதல்கட்டமாக ஒதுக்கீடு செய்துள்ள ரூ.50 கோடி நிதியை அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலமாக தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சிகளிலும் ஐஷர் குழுமம் ஈடுபட்டுள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களை வழங்குவதற்கும், மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதற்குமான முயற்சிகளிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சென்னையில் உள்ள மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுப்பதற்கும் முடிவு செய்துள்ளது.

மேலும், தன் நிறுவனம் சார்பிலும், பணியாளர்கள் சார்பிலும் பிரதமர் நிவாரண நிதிக்கும், தமிழகம் மற்றும் மத்திய பிரதேச மாநில முதல்வர் நிவாரண நிதிக்கும் தங்களது நிதி பங்களிப்பை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தன் நிறுவனம் சார்பில் கொரோனா பாதித்தவர்களுக்கான சிறப்பு மருத்துவ மையங்கள், தனிமைப்படுத்துவதற்கான மையங்கள் மற்றும் நோயாளரி பராமரிப்பு விஷயங்களை செய்து கொடுக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஐஷர் குழுமத்தின் கீழ் இரண்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்ஃபீல்டு மற்றும் வால்வோ - ஐஷர் மோட்டார் டிரக் தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவை ஐஷர் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








