கொரோனாவால் மட்டுமில்ல பசியாலும் மக்கள் தவிக்க கூடாது.. ஏழைகளுக்கு உதவும் இரு பெரிய நிறுவனங்கள்...
இந்தியாவின் சுரக்ஷா திட்டத்தின்கீழ், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஏழை மக்களுக்கு உதவுவதற்காக ஐஷர் குழுமம் மற்றும் மெட்ஷோ இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் முன் வந்துள்ளன.

வரலாறு காணாத ஊரடங்கு உத்தரவை தற்போது நாடும், நாட்டு மக்களும் சந்தித்து வருகின்றனர். இதற்கு ஒற்றை உயிர் கொல்லி வைரஸ் கொரோனா மட்டுமே காரணம். இந்த நிலை இந்தியாவிற்கு மட்டுமே உருவான ஓர் அவலநிலை கிடையாது. உலகின் அனைத்து மூலைகளிலும் இம்மாதிரியான சூழ்நிலையே காணப்படுகின்றது.

ஒவ்வொரு நாடும் முன்னதாக அறிவித்த ஊரடங்கு உத்தரவை நீட்டித்த வண்ணமே இருக்கின்றன. இதற்கு, முன்பைக் காட்டிலும் பல மடங்கு வேகமாக பரவி வரும் உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவின் அத-தீவிரத் தன்மையே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதனால், உலக நாடுகள் பல தங்களின் பொருளாதாரத்தை இழக்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. முக்கியமாக, ஊரடங்கு உத்தரவு காரணமாக தினக் கூலி தொழிலாளர், ஏழை மற்றும் எளியோர்கள் மிகக் கடுமையான பின் விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக, அத்தியாவசியப் பொருட்களுக்கே அல்லல்படும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையைப் போக்குவதற்காக அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டாலும் அவை போதுமானதாக இல்லை என்கின்றனர் பொதுமக்கள். ஒரு சிலர் தங்களுக்கு அரசு சார்பில் எந்த உதவியுமே கிடைக்கவில்லை என்ற பகீர் புகாரை முன் வைக்கின்றனர்.

அரசின் உதவிகள் அனைத்தும் ரேஷன் கார்டுகளை மையமாகக் கொண்டே வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பலரிடம் குடும்ப அட்டை இல்லாத நிலையே காணப்படுகின்றது. இதன் விளைவாக அவர்களுக்கு அரசின் உதவிச் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. எனவே, அவர்களால் அரசின் ரூ.1,000 உதவித் தொகை முதல் இலவச அரிசி என எதையும் பெற முடிவதில்லை.

இந்த நிலையில், சில தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு அமைப்புகள் உள்ளிட்டவை எந்தவொரு ஆதாரமும் பாராமல், உதவிக்காக காத்திருப்போர்களுக்கு வீடு தேடிச் சென்று அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வருகின்றன. இதில், வாகன உற்பத்தி மற்றும் வாகனங்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் பங்கு அளப்பறியது.

அந்தவகையிலான ஓர் அறிவிப்பைதான் தற்போது ஐஷர் குழுமம் மற்றும் மெஸ்டோ இந்தியா ஆகிய இரு நிறுவனங்களும் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளன.
இவ்விரு நிறுவனங்களும் இந்திய அரசுடன் இணைந்து சுரக்ஷா திட்டத்தின்கீழ் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவ இருப்பதாக அறிவித்துள்ளன.

குறிப்பாக, வருமையில் வாடும் ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இருப்பதாக அவை தெரிவித்திருக்கின்றன.
அந்தவகையில் ஐஷர் குழுமம், ரேஷன் மற்றும் பாதுகாப்பு கருவிகள் சிலவற்றை வழங்க முடிவு செய்துள்ளது. இதுமட்டுமின்று தூய்மைப் பணியாளர்களுக்கான 'கிருமிகள் அண்டா' பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு மட்டுமின்றி கர்ப்பிணி பெண்கள், சிறிய கடைக்காரர்கள் தனிமையில் விடப்பட்ட பெண்கள்/குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் என பலருக்கு ஐஷர் குழுமம் உதவியைச் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், புனே மற்றும் புவனேஸ்வர் ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளையும் அது வழங்க இருக்கின்றது.

இந்த அனைத்து உதவிகளையும் ஐஷர் குழுமம் மற்றும் மெட்ஷோ இந்தியா ஆகிய இரு நிறுவங்களும் இணைந்தே வழங்க இருக்கின்றன.
இவையனைத்தும் முக்கியமாக மிக மிக அடித்தட்டு மக்களுக்கு மட்டுமே செய்ய இருப்பதாக அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஐஷர் குழும அறக்கட்டளையின் இயக்குனர் ஜி. சேகர் கூறுகையில், "கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிவாரணம் மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை வழங்க பல முனைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். பிளான் இந்தியா மற்றும் அவர்களின் பங்குதாரர்களுடன் இணைந்து புனே மற்றும் புவனேஷ்வரில் உள்ள 1,500 குடும்பங்களுக்கு உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார்.


Click it and Unblock the Notifications








