கார்களை போன்று பஸ்களிலும் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கட்டாயமாகிறது!
சாலைப் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பஸ்களில் நவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உலகிலேயே அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

குறிப்பாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சராக இருந்து வரும் நிதின் கட்காரி சாலைப் பாதுகாப்புக்கான திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், கார், இருசக்கர வாகனங்களில் பல பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கட்டாயமாக்குவதற்கான முயற்சிகளில் வெற்றி கண்டிருக்கிறார்.

இந்த சூழலில், தற்போது கனரக வாகனங்களிலும் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதன்படி, பஸ்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பங்களை கட்டாயமாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்த பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் பஸ்களை விற்பனை செய்வதை கட்டாயமாக்குவதற்கான முடிவும் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மேலும், வரும் அக்டோபர் மாதம் முதல் குறிப்பிட்ட வகை வாகனங்களில் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டத்தை கட்டாயமாக்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

வாகனங்களுக்கான பரிமாணம் மறறும் தர நிர்ணயம், கட்டுமானத் துறை பயன்பாட்டு வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள், இருசக்கர வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களுக்கான புதிய பாதுகாப்பு வழிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.

அவசர சமயங்களில் வாகனங்களில் திடீரென பிரேக் பிடிக்கும்போது, ஒவ்வொரு சக்கரத்திற்கும் சரியான விகிதத்தில் பிரேக் பவரை அனுப்புவதை கட்டுப்படுத்துவதுடன், எஞ்சின் சுழல் வேகத்தை குறைக்கும் தொழில்நுட்பம்தான் எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் தொழில்நுட்பம். இதன்மூலமாக வாகனத்தின் நிலைத்தன்மை வெகுவாக தக்கவைக்கப்படும்.

அதேபோன்று, பிரேக் அசிஸ்ட் தொழில்நுட்பமும், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட்டு அவசர சமயங்களில் அதிக பிரேக் பவரை செலுத்தி மிக குறைவான தூரத்தில் வாகனத்தை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு உதவி புரியும். டயரில் இருக்கும் காற்றழுத்தத்தை எளிதாக கண்டறியவும், காற்றழுத்தவும் குறைவது குறித்த எச்சரிக்கும் வசதியை டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








