அத்தியாவசிய சேவை வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்... பிட்ஸ்டாப் அறிவிப்பு!
அத்தியாவசிய பொருட்கள் டெலிவிரி, மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களுக்கு இலவச பராமரிப்பு சேவைகளை வழங்குவதாக பிட்ஸ்டாப் நிறுவனம் அறிவித்துள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிட்ஸ்டாப் நிறுவனம் கார் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கு பணிகளை செய்து தரும் சேவையில் ஈடுபட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே கார் சர்வீஸ் செய்து கொடுப்பதில் இந்த நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னையால் ஏற்பட்டுள்ள நிலைமையை மனதில் வைத்து, அத்தியாசிய பொருட்கள் டெலிவிரி செய்வோர், தீயணைப்புத் துறை, காவல் துறை, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளோர் தங்களது வாகனங்களை பிட்ஸ்டாப் மையங்களில் கட்டணமின்றி சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இதற்காக, 6262621234 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து தேவையை கூறினால், சர்வீஸ் செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதாக பிட்ஸ்டாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே, மும்பை, டெல்லி, நொய்டா, குர்கான், பரீதாபாத் ஆகிய நகரங்களில் இந்த கட்டணமில்லா வாகன பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் சேவையை அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாகனங்களுக்கு வழங்க இருக்கிறது பிட்ஸ்டாப்.

அத்தியாவசிய போக்குவரத்துக்காக தேவையை உரிய காரணங்களுடன் தெரிவித்தால், உடனடியாக வாகனங்களை கட்டணமில்லாமல் ஏற்பாடு செய்து தர இருப்பதாக பிட்ஸ்டாப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிட்ஸ்டாப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான மிஹிர் மோகன் கூறுகையில்,"கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சாலைகளில் நின்று போராடும் எமது நாயகர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கத்தை தெரிவிக்கிறேன்.

மக்களுக்கு உரிய நேரத்தில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்காக போராடும் அந்த உண்மையான நாயகர்களுக்கு தேவைப்படும் உதவிகளை பிட்ஸ்டாப் நிறுவனம் சார்பில் செய்ய தயாராக இருக்கிறோம். எங்களது தொலைபேசி எண் அல்லது www.getpitstop.com மூலமாக தகவல் தெரிவித்தால் எந்த நேரத்திலும் எங்களது வாகனங்களை கட்டணமில்லாமல் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அங்கீகரிக்கப்பட்ட வாகன சர்வீஸ் மையங்கள், மெக்கானிக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன பழுது காரணமாக, சிக்கலில் தவிக்கும் அத்தியாவசிய பணியாளர்களுக்கு பிட்ஸ்டாப் நிறுவனத்தின் அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும். உள்ளூர் அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் பிட்ஸ்டாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








