பிஎஸ்-4 வாகன விற்பனை குறித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு... விழி பிதுங்கும் கார் நிறுவனங்கள்!
பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான காலக்கெடு குறித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை கொடுத்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த மாதம் 31ந் தேதி வரை மட்டுமே பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்யவும், பதிவு செய்வதற்கும் கால அவகாசம் உள்ளது. வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் இயலும்.

ஒருபக்கம் பிஎஸ்-6 வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. மறுபுறத்தில் இருப்பில் உள்ள பிஎஸ்-4 கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை விற்று தீர்ப்பதற்கான முயற்சிகளில் வாகன நிறுவனங்களும், டீலர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், பிஎஸ்-4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்குமான காலக்கெடுவை நீடித்து தருமாறு உச்ச நீதிமன்றத்தில் இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஏற்கனவே போதுமான அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக கருதி, காலக்கெடுவை நீடிப்பதற்கு மறுத்துவிட்டது.

இதனையடுத்து, பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்களை வரும் மார்ச் 31ந் தேதிக்குள் விற்று தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் வாகன விற்பனையாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நீடிக்க மறுத்துவிட்டதை கருதி, வாகன உற்பத்தி நிறுவனங்கள் இனி பிஎஸ்-6 வாகனங்களை மட்டுமே டீலர்களுக்கு அனுப்புமாறு கூட்டமைப்பு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பிஎஸ்-4 வாகனங்களை டீலர்களுக்கு அனுப்புவதற்கான பில் செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறும் வாகன உற்பத்தி நிறுவனங்களை விற்பனையாளர் கூட்டமைப்பு வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு தலைவர் ஆசிஷ் கலே கூறுகையில்,"கடந்த ஓர் ஆண்டு காலமாக வாகன விற்பனையில் மந்த நிலை இருப்பதை கருதி, பிஎஸ்-4 வாகன விற்பனைக்கான காலக்கெடுவை நீடித்து தர வேண்டி இருந்தோம்.

ஆனால், எங்களது மனுவை உச்ச நீதிமன்றம் பரீசிலிக்க வில்லை. கடந்த 2018ம் ஆண்டு கொடுத்த உத்தரவை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, வரும் மார்ச் 31ந் தேதியுடன் பிஎஸ்-4 வாகன விற்பனைக்கான காலக்கெடு முடிவடைகிறது. எனவே, வாகன உற்பத்தி நிறுவனங்கள் பிஎஸ்-6 வாகனங்களை மட்டுமே டீலர்களுக்கு அனுப்ப வேண்டுகோள் வைத்துள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.

இதனால், கார் உற்பத்தி நிறுவனங்கள் கையில் இருக்கும் பிஎஸ்-4 வாகனங்கள் இனி டீலர்களுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. டீலர்களில் இருப்பு இருக்கும் பிஎஸ்-4 வாகனங்கள் மட்டுமே இனி விற்பனை செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், பிஎஸ்-4 வாகனங்களுக்கான காலக்கெடு நெருங்கி வருவதையடுத்து, அதிகபட்ச சலுகைகளுடன் விற்று தீர்ப்பதற்கான திட்டங்களையும் வாகன நிறுவனங்கள் கையில் எடுத்துள்ளன.


Click it and Unblock the Notifications








