பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்வதற்கு காலக்கெடு மீண்டும் நீட்டிக்க வாய்ப்பு!
தேசிய ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பிரச்னையால் அமலில் இருந்த 21 நாட்கள் ஊரடங்கு நேற்று நிறைவடைந்தது. இந்த நிலையில், கொரோனா பரவும் வேகம் அதிகம் இருப்பதை கணித்து, தேசிய ஊரடங்கு வரும் மே 3ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

இந்த சூழலில், கடந்த 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்தன. இதனால், பிஎஸ்4 வாகனங்களின் விற்பனை மற்றும் பதிவு செய்வதற்கான காலக்கெடு கடந்த மாதம் 31ந் தேதியுடன் முடிந்தது.

இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை தவிர்த்து, ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு ஊரடங்கு காரணமாக, பதிவு செய்ய முடியாத பிஎஸ்4 வாகனங்கள் மற்றும் இருப்பில் தேங்கி இருக்கும் வாகனங்களை விற்பனை செய்வதற்கு காலக்கெடுவை நீட்டித்து தருவதற்கு வாகன டீலர்கள் கூட்டமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 27ந் தேதி புதிய உத்தரவு வழங்கியது. அதில், ஏப்ரல் 15 (இன்று) முதல் 10 நாட்களுக்கு பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் கால அவகாசம் வழங்கியது.

அதுவும் டெல்லி உள்ளிட்ட வட மத்திய பிராந்திய பகுதிகளில் பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்யவோ, பதிவு செய்யக்கூடாது. நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருப்பில் உள்ள 10 சதவீத வாகனங்களை மட்டும் விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த சூழலில், தற்போது தேசிய ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதனால், வரும் மே 3ந் தேதி வரை ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் ஷோரூம்களை திறக்க முடியாத நிலை உள்ளது. எனவே, பிஎஸ்4 வாகன விற்பனை மற்றும் பதிவுக்கான காலக்கெடு மீண்டும் நீடிக்கப்படும் வாய்ப்புள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுபடி, ஊரடங்கு விலக்கப்பட்டது முதல் 10 நாட்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, மே 4 முதல் 10 நாட்களில் இருப்பில் உள்ள 10 சதவீத பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கும், பதிவு செய்வதற்கும் கால அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு (FADA) மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலவும் சூழலை மனதில் வைத்து, பிஎஸ்4 வாகனங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு வழங்குவதற்கு கோரிக்கை வைக்கப்படும்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் பிஎஸ்4 மாசு உமிழ்வு தரமுடைய 1.05 லட்சம் இருசக்கர வாகனங்களும், 2,250 பயணிகள் வாகனங்களும், 2,000 வர்த்தக வாகனங்களும் விற்பனை செய்யப்பட்டு, பதிவு செய்வதற்காக காத்திருக்கிறதாம்.

அதேபோன்று, விற்பனை செய்யாமல் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட பிஎஸ்4 இருசக்கர வாகனங்களும், 12,000 கார்களும், 8,000 வர்த்தக வாகனங்களும் இருப்பில் தேங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால், வாகன உற்பத்தி நிறுவனங்களும், டீலர்களும் மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








