அரசியல்வாதிபோல் ஆசை காட்டி ஏமாற்றிய டீலர்! தக்கபாடம் புகட்டிய நீதிமன்றம்.. இப்படியும் ஏமாற்றுவார்களா
அரசியல்வாதிகளைப் போல பொய்யான வாக்குறுதியை அளித்ததால் ரெனால்ட் டீலர்ஷிப் ஷோரூம் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.

தேர்தலில் அதிக வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சி தலைவர்கள், ஒரு சில வாக்குறுதிகளை வழங்குவது வழக்கம். மக்களும் அந்த கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து ஜெயிக்க வைப்பர். ஆனால், ஆட்சிக்கு வரும் அந்த தலைவர்களோ, அரியணை ஏறியபின் தாங்கள் வழங்கிய எந்தவொரு வாக்குறுதியையும் செயல்படுத்த மறந்துவிடுகின்றனர்.

இதை நம்பி வாக்களித்த மக்களோ, தங்களின் தலைவர் இன்று அதனை செயல்படுத்துவார், நாளை செயல்படுத்துவார் என நம்பி, ஐந்தாண்டுகள் ஆட்சிக் காலம் முழுவதும் காத்திருப்பர். காத்திருக்கும் அவர்களுக்கு கடைசி வரை எந்தவொரு பலனும் கிடைப்பதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை
தற்போது இதேபோன்று ட்ரிக்குகளை வாகன டீலர்களும் கையாளுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த தகவலின்படி, கேரள மாநிலம் கொள்ளத்தைச் சேர்ந்த ரெனால்ட் டீலர் ஒருவர் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக லக்கி டிராவ் போட்டி ஒன்றை வைத்துள்ளார். இதன்படி, தங்களிடம் புதிதாக கார் வாங்கும் ஐந்து வாடிக்கையாளர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு எஸ்யூவி ரக டஸ்டர் கார் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, பெரும்பாலான டீலர்கள் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்காக இதுபோன்று அறிவிப்பு வெளியிடுவது வழக்கம்தான். ஆனால், இதில்தான் அந்த ரெனால்ட் டீலர் டுவிஸ்டையே வைத்துள்ளது.

வாடிக்கையாளரைக் கவரும் விதமாக கவர்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அந்த டீலர், அறிவித்தபடி லக்கி டிராவ் போட்டியை நடத்தவில்லை என கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்த தகவல் வழக்குரைஞர் அளித்த புகாரின் பேரிலேயே தெரியவந்துள்ளது.

கொள்ளம் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் (வழக்குரைஞர்) கடந்த 2014ம் ஆண்டு ஓனம் பண்டிகையின்போது ரெனால்ட் டஸ்டர் எஸ்யூவி ரக காரை புதிதாக டிவிஎஸ் அண்ட் சன்ஸ் டீலரிடம் இருந்து வாங்கியுள்ளார். அப்போது, ஓனம் தினத்தை முன்னிட்டு குலுக்கல் பரிசாக ஐந்து அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு புத்தம் புதிய டஸ்டர் எஸ்யூவி ரக கார் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் அந்த அதிர்ஷ்டசாலிகள் பற்றிய தகவலை குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும் என டீலர் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், அதுகுறித்த தகவல் டீலர்கள் தரப்பில் இருந்து கங்காதரனுக்கு கிடைக்கவில்லை.

எனவே, அவ்வப்போது டீலர்களை தொடர்புகொண்ட அவர் லக்கி வின்னர் பற்றி கேட்டு வந்துள்ளார். ஆனால், ஷோரூம் ஊழியர்கள் தரப்பில் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
வாடிக்கையாளர்களை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வருவதை உணர்ந்த வழக்குரைஞர் கங்காதரன், இதுகுறித்து மனு ஒன்றினை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

அதில், பொய்யான விளம்பரங்களை கூறி வாடிக்கையாளர்களை குறிப்பிட்ட டீலர்கள் கவர்வதாகவும், லக்கி டிராவ் முறையில் வெளிப்படத் தன்மை இல்லையென்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஆய்வு செய்ததில் டீலர் நிறுவனம் லக்கி டிராவ் என்ற ஓர் போட்டியை நடத்தவே இல்லை என்பது தெரியவந்தது.

மேலும், வாடிக்கையாளர்களை கவர்ச்சியான அறிவிப்பால் கவரும் நோக்கில் மட்டுமே அதனை அறிவித்தது தெரியவந்தது. எனவே, அந்த டீலர்கள் ஷோரூமுக்கு தக்க பாடம் புகட்டும் விதமாக, நீதிபதிகள் இ.எம். முஹமத் இப்ராஹிம்., எஸ். சந்தியா ராணி., ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்குரைஞர் கங்காதரனுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சம் வழங்குமாறு உத்தரவிட்டது.

இத்துடன், வாடிக்கையாளரை மன உலைச்சளுக்கு உள்ளாக்கியதன் காரணமாக ரூ. 10 ஆயிரத்தை வழக்கிற்கான கட்டணமாக வழங்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
அரசியல்வாதிகளைப் போல் பொய்யான வாக்குறுதிகளை அறிவித்து வாடிக்கையாளர்களைக் கவர்ந்த ரெனால்ட் டீலருக்கு இது தக்க பாடமாகவே உள்ளது.

அதேசமயம், பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல்வாதிகள் மீதும் இதேபோன்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது. ஏனென்றால், பல அரசியல் வாதிகள் மக்களிடம் பல பொய்யான வாக்குறுதி அளித்தே ஆட்சியில் அமர்கின்றனர்.


Click it and Unblock the Notifications








