பயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை நேரடியாக விற்பனை செய்யும் ஜீப் நிறுவனம்!
பயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை நம்பகமான முறையில் வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு ஏதுவாக புதிய திட்டத்தை துவங்கி இருக்கிறது ஜீப் நிறுவனம்.

அமெரிக்காவை சேர்ந்த ஜீப் நிறுவனம் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் ஜீப் கார்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உருவாகி இருக்கிறது. குறிப்பாக, ஜீப் நிறுவனத்தின் வர்த்தகத்தில் காம்பஸ் எஸ்யூவி மிக முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது.

இந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவியை வாடிக்கையாளர்கள் எளிதாக வாங்குவதற்கான புதிய திட்டத்தை ஜீப் நிறுவனம் அறிவித்துள்ளது. SELECTEDforYOU என்ற பெயரில் இந்த புதிய திட்டம் அழைக்கப்படுகிறது.

பயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவிகளை நேரடியாக வாங்கி விற்பனை செய்யும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த திட்டத்திற்காக அதிகாரப்பூர்வ இணையதளம் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

முதல்கட்டமாக டெல்லி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் கடந்த ஆண்டு இந்த திட்டம் சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர் மத்தியில்அதிக வரவேற்பு இருந்ததால், மேலும் 42 டீலர்களுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாடு முழுவதும் உள்ள 65 டீலர்கள் இந்த இணையதளத்தில் இணைக்கப்பட உள்ளதாக ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் காம்பஸ் எஸ்யூவியை வாங்க விரும்பும் வாடிக்கையாளர் மட்டுமின்றி, தங்களது காம்பஸ் எஸ்யூவியை விற்பனை செய்ய விரும்புவோரும் பதிவு செய்து கொள்ள முடியும்.

இந்த திட்டம் அறிமுகம் குறித்து ஃபியட் க்றைஸ்லர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பார்த்தா தத்தா கூறுகையில்,"இந்திய கார் மார்க்கெட்டில் மிகச் சிறந்த மதிப்புடைய மாடலாக காம்பஸ் எஸ்யூவி உள்ளது. இந்த புதிய செலக்டெட் ஃபார் யூ திட்டம் அதிக நம்பகத்தன்மையுடன் பயன்படுத்தப்பட்ட காம்பஸ் எஸ்யூவிகளை வாங்குவதற்கு வழிவகுக்கும்.

கார் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் புதிய காம்பஸ் போலவே, பயன்படுத்தப்பட்ட காம்பஸ் காருக்கும் பல்வேறு பரிசோதனைகளுக்கு உட்படுத்தி சிறந்த கண்டிஷனுடன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும்," என்று தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தப்பட்ட காம்பஸ் கார் விற்பனைக்கு செல்வதற்கு முன் 125 விதமான பரிசோதனைகள் செய்யப்படுவதுடன் பழைய உரிமையாளர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே விற்பனை செய்யப்படும். இதற்காக சான்றளிக்கும் திட்டமும் உள்ளது.

எந்த ஒரு கார் நிறுவனத்தின் எந்தவொரு கார் மாடலையும் எக்ஸ்சேஞ்ச் செய்து பயன்படுத்தப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவியை வாங்குவதற்கான வசதியும் செய்து தரப்படுகிறது. மேலும், பல புதிய ஜீப் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதால், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையிலும் இறங்கி உள்ளதாக ஜீப் தெரிவித்துள்ளது.

செலக்டெட் ஃபார் யூ திட்டத்தின் மூலமாக விற்பனை செய்யப்படும் ஜீப் காம்பஸ் காருக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 60.000 கிமீ தூரத்திற்கான வாரண்டி மற்றும் 24 மணிநேர சாலை அவசர உதவித் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








