ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் சகாப்தம் இந்தியாவில் முடிவுக்கு வந்தது!
இந்தியாவின் தேசிய எஞ்சின் என்று செல்லமாக குறிப்பிடப்பட்டு வந்த ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவில் ஓடும் பாதிக்கும் மேற்பட்ட டீசல் கார்களில் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் உயிர் கொடுத்து வருகிறது. மிக நீண்டகாலமாக இந்தியர்களின் நம்பிக்கையை பெற்ற இந்த எஞ்சின் ஃபியட் கார்கள் மட்டுமின்றி, மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு, செவர்லே என பல நிறுவனங்களின் கார்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

மாருதி சுஸுகி கார்களில் டிடிஐஎஸ் என்ற பெயரிலும், டாடா மோட்டார்ஸ் கார்களில் டியூராடார்க் என்ற பெயரிலும், ஃபோர்டு கார்களில் டியூராடார்க் என்ற பெயரில் குறியீட்டுப் பெயர்களுடன் வழங்கப்பட்டு வந்தது. மேலும், இந்த எஞ்சினை கார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான வகையில் எளிதாக டியூனிங் செய்து கொள்ளும் வசதியை அளித்து வந்தது.

ஃபியட் நிறுவனத்தின் கார் விற்பனை மிக மோசமான நிலையில் இருந்தாலும் கூட இந்த எஞ்சினை வைத்து இந்தியாவில் வர்த்தகத்தை சிறப்பாக ஓட்டி வந்தது. ஆனால், பிஎஸ்-6 மாசு உமிழ்வு காரணமாக, இந்த எஞ்சினை மேம்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த எஞ்சினை மேம்படுத்துவதற்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் என்பதுடன், இதற்கான வரவேற்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது சந்தேகத்திற்கு இடமாக இருந்தது. இதையடுத்து, இந்த எஞ்சினை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு மேம்படுத்துவதற்கு ஃபியட் விரும்பவில்லை.

இந்த நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் ரஞ்சன்கவுன் பகுதியில் உள்ள ஃபியட் ஆலையில், நேற்று (ஜனவரி 23) கடைசி ஃபியட் 1.3 லிட்டர் (#810829) டர்போ டீசல் எஞ்சின் உற்பத்தி பிரிவில் இருந்து வெளிவந்தது. இந்த எஞ்சினுக்கு ஆலையில் ஊழியர்கள் பிரியாவிடை அளித்தனர்.

இதுவரை 9,60,719 ஃபியட் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த எஞ்சின் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும், பல குடும்பத்தினருக்கு வாழ்வாதாரமாக இருந்ததாக ரஞ்சன்கவுன் ஆலையில் பணிபுரியும் சமீர் அஜ்கோன்கர் முகநூல் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாருதி கார்களஇல் 74 எச்பி முதல் 90 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக ட்யூனிங் செய்து பயன்படுத்தப்பட்டு வந்தது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். மாருதி ஸ்விஃப்ட், டிசையர், எர்டிகா, பலேனோ, சியாஸ் ஆகிய கார்களிலும் இடம்பெற்றிருந்தது.

இதேபோன்று, டாடா போல்ட், ஸெஸ்ட், இண்டிகோ, ஃபியட் புன்ட்டோ, லீனியா மற்றும் இதர பல கார் மாடல்களிலும் இந்த எஞ்சின் பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளில் செவர்லே, சிட்ரோன், லான்சியா, ஓபல், சுஸுகி மற்றும் பீஜோ ஆகிய நிறுவனங்களின் கார்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதிக எரிபொருள் சிக்கனம், சிறந்த செயல்திறனும் இந்தியாவில் பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மிகவும் நம்பகமான டீசல் எஞ்சின் என்ற பெருமையுடன் விடைபெற்றுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனையில் இந்த எஞ்சின் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வந்தது. இந்த நிலையில், மாருதி நிறுவனம் தனது சொந்த முயற்சியில் உருவாக்கிய புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை பிஎஸ்-6 தரத்திற்கு மேம்படுத்தி பயன்படுத்துவதற்கான திட்டத்தை கையில் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








