'துளியும் கவலை வேண்டாம்'!... இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஃபியட் கொடுத்த உறுதிமொழி
இந்தியாவில் ஃபியட் கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டு விட்ட நிலையில், வாடிக்கையாளர்களுக்கு முக்கிய உறுதிமொழியை அந்நிறுவனம் வழங்கி இருக்கிறது.

இத்தாலியை சேர்ந்த ஃபியட் நிறுவனம் உலகின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. வலிமையான கட்டமைப்பு, எக்காலத்திற்கும் ஏற்ற வடிவமைப்பு அம்சங்களுடன் உலக அளவில் வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக நம்பிக்கையை பெற்ற நிறுவனமாக ஃபியட் விளங்குகிறது.

ஃபியட் கார்களுக்கு இந்தியாவிலும் பெரிய அளவிலான ரசிக பட்டாளம் உண்டு. ஃபியட் கார்களை உருகி, மருகி காதலித்து வாங்கி பயன்படுத்தி வருபவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக, புன்ட்டோ, லீனியா கார்களை இன்றவும் பொக்கிஷமாக பேணி பாதுகாத்து வரும் வாடிக்கையாளர்கள் மிக அதிகம்.

எனினும், இந்திய சந்தையில் ஜாம்பவான் நிறுவனங்களின் வியாபார தந்திரங்களுக்கு ஃபியட் நிறுவனத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் கூட்டணியில் கார்களை விற்பனை செய்து வந்த ஃபியட் பின்னர் தனி ஆவர்த்தனத்தை துவங்கியது.

ஆனாலும், எதிர்பார்த்த அளவு இந்திய வர்த்தகத்தில் சாதிக்க முடியவில்லை. இதனால், கடந்த ஆண்டு துவக்கத்திலேயே புன்ட்டோ மற்றும் லீனியா கார்களின் உற்பத்தியை நிறுத்தியது.

ஆனால், தனது 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சப்ளை செய்ததன் மூலமாக இந்திய வர்த்தகத்தை ஓரளவு தாக்குப் பிடித்தது.

ஆனால், அந்த எஞ்சினுக்கும் பிஎஸ்6 ரூபத்தில் பிரச்னை வந்துள்ளதால், இந்திய வர்த்தகத்தை முழுவதுமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு மாற்றாக, தனது ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஜீப் பிராண்டு மூலமாக இந்தியப் பிரிவின் செயல்பாடுகளை தொடர்ந்து வருகிறது.

இந்த சூழலில், ஃபியட் கார்கள் உற்பத்தி முடிவுக்கு வந்துவிட்டதால், அந்த கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளையில் பிரச்னை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது ஃபியட் வாடிக்கையாளர்களுக்கு பெரும் தலைவலியாக அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனது கார்களுக்கான உதிரிபாகங்கள் சப்ளை குறித்து ஃபியட் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆட்டோ கார் இந்தியா தளத்திடம் பேசிய ஃபியட் க்றைஸ்லர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பார்த்தா தத்தா கூறுகையில்," அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஃபியட் கார்களுக்கான உதிரிபாகங்கள் தங்கு தடையின்றி கிடைக்கும்," என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும், மோபர் நிறுவனத்துடன் இணைந்து புனே அருகில் சகனில் உதிரிபாகங்களுக்கான பிரத்யேக வினியோக மையத்தையும் அமைத்துள்ளதாக அவர் கூறி இருக்கிறார். ஒவ்வொரு ஃபியட் வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் உதிரிபாகங்கள் கிடைப்பதற்கு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜீப் டீலர்கள் மற்றும் சர்வீஸ் மையங்களில் ஃபியட் கார்களை சர்வீஸ் செய்வதற்கும், உதிரிபாகங்களை வாங்குவதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் பார்த்தா தத்தா கூறி இருக்கிறார். ஜீப் நிறுவனத்தின் டீலர்களில் மோபர் உதிரிபாக விற்பனை மையங்களும் உள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.

கடந்த 2009ம் ஆண்டு இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தகத்தை துவங்கியது ஃபியட் நிறுவனம். 10 ஆண்டு காலத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கூட்டணியில் சிறப்பான வர்த்தகத்தை செய்து வந்தது. ஆனால் தனி ஆவர்த்தனம் மூலமாக வர்த்தம் மேலும் குறுகிப் போனதுதான் அந்த பிராண்டு இந்தியாவிலிருந்து விடைபெறுவதற்கு காரணமாகிவிட்டது.


Click it and Unblock the Notifications








