எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியத் திட்டத்தை நீட்டிக்க எஃப்ஐசிசிஐ அமைப்பு கோரிக்கை
எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு ஃபேம் மானியத் திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) வலியுறுத்தி உள்ளது.

கொரோனா பிரச்னை காரணமாக வாகனத் துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பொது போக்குவரத்து மற்றும் வாடகை வாகனத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த சூழலில், வாகனத் துறைக்கு போதிய ஊக்குவிப்புத் திட்டங்களை கொடுத்து மத்திய, மாநில அரசுகள் கை தூக்கி விட வேண்டும் என்று எஃப்ஐசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, மூன்று சக்கர மின்சார வாகனங்களுக்கான மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்புள்ள்ளது. இதில், முதலீடு செய்துள்ளவர்கள் கவலை கொண்டுள்ளதாகவும், புதிய முதலீடுகளும் தவிர்க்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர்த்து, மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மின்சார வாகனங்களின் விற்பனையை ஊக்குவிப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள ஃபேம்-2 மானியத் திட்டத்தை வரும் 2025ம் ஆண்டு வரை நீடிக்க வேண்டும். இதன்மூலமாக, இந்த துறை மிக வேகமான வளர்ச்சியை பெறுவதுடன் உலக அளவில் மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா முன்னிலை பெற முடியும் என்று எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், எஃப்ஐசிசிஐ அமைப்பின் மின்சார வாகன உற்பத்திப் பிரிவு சார்பில் இந்த பரிந்துரைகள் மத்திய கனரக தொழில் அமைச்சகம், சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம், நிதி அயோக் ஆகிய அரசு அமைப்புகளிடம் கோரிக்கைகள் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஃபேம்-2 மானியத் திட்டத்திற்கு கால நீட்டிப்பு வழங்கினால் மின்சார வாகன விற்பனையில் சிறப்பான இடத்தை பெறுவதற்கும், இந்த துறையில் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் உருவாவதற்கும் வழிவகுக்கும் என்று தனது கோரிக்கை கடிதத்தில் எஃப்ஐசிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஃபேம்-2 திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.10,000 கோடி நிதியிலேயே அடுத்த ஓர் ஆண்டுக்கு மின்சார வாகன விற்பனையை அதிகரிக்கும் வகையில் சிறப்பு ஊக்குவிப்பு மானியத் திட்டத்தை கூடுதலாக வழங்கினாலும் அது நிச்சயம் பெரிய பயன் அளிக்கும் என்றும் அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களுக்கு வங்கிகள் அதிகபட்ச அளவு கடன் தருவதை உறுதி செய்வதற்கும் வழி வகை செய்தால் அது மிகுந்த பயன் அளிக்கும். மேலும், எலெக்ட்ரிக் பஸ் விற்பனையை ஊக்குவிக்கவும் ஃபேம்-2 திட்டத்தில் ஊக்குவிப்பு திட்டங்களை இந்த துறை சார்ந்த நிறுவனங்களுடன் கலந்து பேசி அமல்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








