உலகின் முதல் சமூக இடைவெளி ரேஞ்ஜ் ரோவர் கார்... இனி கொரோனா அச்சமில்லாமல் கார் வாங்கலாம்!
சமூக இடைவெளி என்னும் தாரக மந்திரத்தின் அடிப்படையில் ரேஞ்ஜ் கார் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கொரோனா வைரசால் ஏற்பட்டிருக்கும் இழப்பு எண்ணற்றவை. அதேசமயம், இதனால் நாம் கற்றுக்கொண்ட பாடமோ ஏராளம். குறிப்பாக தூய்மையாக இருத்தல், பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல வாழ்க்கை பாடங்களை அது நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளது.

இதுமாதிரியான வாழ்க்கை பாடங்களை மட்டுமின்றி கூடுதலாக பல புதிய கற்றலையும் அது நமக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக, வாகன தயாரிப்பு மற்றும் அதனை பராமரிப்பதில் புதிய வழிகாட்டுதல்களை இந்த உலகிற்கு அது வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்கு பரவலாம் என்ற சூழல் இருப்பதால், எந்தவொரு விஷயத்திலும் அதிக கவனம் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது.
MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

இதன்காரணமாகவே, வாகனங்கள் மீது அதிகம் கவனம் செலுத்தப்படுகின்றது. தற்போது, மிக முக்கியமான ஒன்றாக 'சமூக இடைவெளி' மாறியிருக்கின்றது. இதுவோ கொரோனா தொற்றில் இருந்து நம்மைக் காக்கும் தாரக மந்திரமாகவும் மாறியுள்ளது.

எனவேதான் கொரோனாவால் உருவாகிய இக்காடன காலத்தில் வாகனங்களை பராமரிப்பது முதல் அதனை டெலிவரி செய்வது வரை சமூக இடைவெளி என்னும் முறையை வாகன நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.

அந்தவகையில், வாகனங்களை சர்வீஸ் செய்யும்போது, வாகனங்களை நேரடியாக தொடர்பு கொள்ளாமல் அதனை சர்வீஸ் செய்து வருகின்றனர். இதற்காக கருவிகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோன்று, புதிய வாகனங்களை டெலிவரி கொடுப்பதிலும் தனித்துவமான யுக்தி கையாளப்படுகின்றது. அதாவது புதிய வாகனத்தை டெலிவரி வழங்குவதற்கு முன்பு, அந்த வாகனத்தை முழுமையாக சானிட்டைசிங் (கிருமி நாசினி) செய்து வழங்குவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதுமட்டுமின்றி, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, காருக்கான சாவியை ட்ரோன்கள் மூலம் ஒரு சில டீலர்கள் வழங்கி வருகின்றனர். இதுபோன்று விநோதமான நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வாகனத்தை தயாரிப்பதிலும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், சமூக இடைவெளி கடைபிடித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம், அதன் முதல் ரேஞ்ஜ் ரோவர் காரை தயாரித்திருப்பதாக அந்த தகவல் கூறுகின்றது.
இங்கிலாந்தில் உள்ள சோலிஹல்ல தயாரிப்பு கூடத்தில் வைத்தே இந்த சமூக இடைவெளி ரேஞ்ஜ் ரோவர் தயாரிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, இந்த எஸ்யூவி காரை தயாரிக்கும்போது மிகக் கடுமையான வழிமுறைகளை அவர்கள் கையாண்டுள்ளனர். குறிப்பாக, வாகனத்திற்கும் பணியாளர்களுக்கும் இடையேயான நேரடி தொடர்பை துண்டித்தல் (நேரடியாக மனித கைகள் படாமல்) மற்றும் பணியாளர் உடல் நலனை கண்கானித்தல் உள்ளிட்ட பல நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நடவடிக்கையை உற்பத்தி மையத்தில் மட்டுமின்றி அலுவலக பகுதியிலும் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கையாண்டுள்ளது.
சமீப காலமாக கோவிட்-19 பிரச்னையால் அனைத்து பணிகளையும் தற்காலிகமாக முடக்கிவிட்டிருந்த இந்நிறுவனம், தற்போது உற்பத்தி பணியைத் தொடங்கியிருக்கின்றது.

இதைத்தொடர்ந்தே இந்த சமூக இடைவெளி ரேஞ்ஜ் ரோவர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கார் தயாரிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அந்நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், பணியாளர்கள் கை கவசம் மற்றும் முகமூடிகள் உள்ளிட்டவற்றை அணிந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது.

இந்த கார் சமூக இடைவெளிவிட்டு தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் விற்பனைக்குச் செல்லும்போது நிச்சயம் சானிட்டைசிங் செய்யப்பட்ட பின்னரே வாடிக்கையாளர்க்கப்படும். இம்மாதிரியான நடவடிக்கையைதான் வாகன விற்பனையாளர்கள் சமீப காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








