ஏலத்தில் இமாலய தொகையை நெருங்கி கொண்டிருக்கும் 2020 மஹிந்திரா தார்... இப்போவே ரூ.89 லட்சமாம்...
தற்சமயம் நடைபெற்று கொண்டிருக்கும் 2020 மஹிந்திரா தாரின் முதல் மாதிரிக்கான ஏலம் கிட்டத்தட்ட ரூ.89 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மஹிந்திரா நிறுவனம் அதன் நிறுவன தினத்தை வருகிற அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியின்போது கொண்டாடவுள்ளது. இதனால்தான் இந்த சிறப்புமிக்க தினத்தில் அதன் புதிய தயாரிப்பான 2020 தார் மாடலை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மேலும் இதே தினத்தில் இந்த 2020 மாடலுக்கான முன்பதிவுகளும் துவங்கப்படவுள்ளதாக இந்நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியாகியுள்ள டீசர் வீடியோ கூறுகிறது. இதனை தொடர்ந்து டெலிவிரிகள் அதற்கு அடுத்த சில நாட்களில் துவங்கப்பட்டுவிடும் என தெரிகிறது.

புத்தம் புதிய ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள 2020 தார் அதன் முந்தைய தலைமுறையை காட்டிலும் முற்றிலும் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக விளங்குகிறது. ஏனெனில் புதிய தார் கூடுதல் சவுகரியம், கூடுதல் ஆற்றல், புதிய என்ஜின் தேர்வுகள், கூடுதல் வசதிகள், கூடுதல் இட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புதிய தலைமுறை தார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளதாக டீலர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள இந்த 2020 மாடலின் அறிமுகத்திற்கு முன்னர் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர், சாஃப்ட் டாப் மற்றும் ஹார்ட் டாப் என்ற இரு விதமான வேரியண்ட்களில் இந்த மஹிந்திரா தயாரிப்பு வெளிவரவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏஎக்ஸ் மற்றும் எல்எக்ஸ் என அழைக்கப்படும் இந்த இரு வேரியண்ட்களிலும் ஓட்டுனர் மற்றும் பயணிகளின் சவுகரியம் மற்றும் பாதுகாப்பிற்கு பிரத்யேகமான அம்சங்களை மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் இந்த ஆஃப்-ரோடு வாகனம் லக்சரி வாடிக்கையாளர்களையும் கவர்ந்திழுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2020 மஹிந்திரா தாருக்கு ரெட் ரேஜ், மிஸ்டிக் காப்பர், நெப்போலி பிளாக், அக்வாமரைன், கேலக்ஸி கிரே மற்றும் ராக்கி பீஜ் என்ற 6 விதமான நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமானதாக, மாற்றக்கூடிய மேற்கூரையை முதன்முறையாக இந்த மஹிந்திரா தயாரிப்பு பெற்று வருகிறது.

இதுமட்டுமின்றி இயற்கை அழகை ரசிக்க நீக்கக்கூடிய வகையில் கதவுகளும் புதிய தாரில் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் சிறப்பம்சங்களாக 7 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 8.89 செ.மீ-ல் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், 6 ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்த முதல் 2020 தார் தற்சமயம் ஏலத்தில் உள்ளது. இதற்கான ஏலம் தற்போதைக்கு ரூ.89 லட்சம் என்ற அளவில் சென்று கொண்டிருக்கிறது. நாளை (செப்.29) வரையில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தின்மூலம் கிடைக்கும் தொகையை மஹிந்திரா நிறுவனம் என்ஜிஒ அமைப்பிற்கு நன்கொடையாக வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. நிறைவு நாளான நாளை இந்த ஏலம் இன்னும் விறுவிறுப்படையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








