அடேங்கப்பா இது கார்தானா! ஒரு முழுமையான சார்ஜில் 480 கிமீ சுற்றி வரலாம்.. டெஸ்லாவுக்கு போட்டி இதுதான்
ஒரு முழுமையான சார்ஜில் அதிக தூரம் செல்லும் மின்சார கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியாவில் வெகுவிரைவில் அறிமுகமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் மின்வாகனங்களுக்கான சந்தை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள், தங்களின் புத்தம் புதிய மின் வாகனங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதில், ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கிவிட்டநிலையில், அவை தயாரித்த புதிய மின்சார வாகனங்களை அவை அறிமுகம் செய்து வருகின்றன.

அந்தவகையில், தற்போது ஒரு முழுமையான சார்ஜில் அதிக தூரம் செல்லும் எலெக்ட்ரிக் கார் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிஸ்கர் ஓசோன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மின்சார கார் வருகின்ற 2021ம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. அதேசமயம், இதன் டெலிவரி 2022ம் ஆண்டிலேயே தொடங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபிஸ்கர் ஆட்டோமோட்டிவ் (Fisker Automotive) என்ற வாகன உற்பத்தி நிறுவனமே இந்த எஸ்யூவி ரக மின்சார காரை தயாரித்துள்ளது. இந்த காரை, டேனிஷ் ஆட்டோமோட்டிவ் டிசைனர் மற்றும் என்ட்ரீபிரியூனரான ஹென்ரிக் ஃபிஸ்கர் வடிவமைத்துள்ளார்.
இந்த புதிய எஸ்யூவி எலெக்ட்ரிக் காரில் 80kWh பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதாக ஃபிஸ்கர் ஓசோன் காரை தயாரித்த குழு தெரிவித்துள்ளது.

இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் செல்ல முடியுமாம். மேலும், இதன் மின்மோட்டார் 0 த்தில் இருந்து 100 கிமீ என்ற வேகத்தை வெறும் 2.9 செகண்டுகளிலேயே தொடுகின்ற அளவிற்கு திறன் வாய்ந்ததாக காட்சியளிக்கின்றது.
இது, ஜெட் விமானங்களுக்கு இணையான வேகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரின் ரேஞ்ச் மற்றும் வேகம் நம்மை வியப்பில் ஆழ்த்தியதைப் போன்றே காரின் வடிவமைப்பும் அதில் காணப்படும் சிறப்பம்சங்களும் நம்மை மயங்கவே வைத்துவிடுகின்றன. இது, காரைப் பார்த்தாலே நமக்கு புரிந்துவிடும்.

குறிப்பாக, காரின் தோற்றம் தற்போது நாம் சாலையில் பார்த்து கொண்டிருக்கும் வாகனங்களைக் காட்டிலும் மிக அமர்க்களமான ஸ்டைலில் காட்சியளிக்கின்றது. இது எதிர்கால ஸ்டைலுக்கு இணையானதாகும்.

அதுமட்டுமின்றி, தொழில்நுட்பம் பற்றி பார்ப்போமேயானால், காரின் மேற்பரப்பில் சோலார் போனல் பொருத்தப்பட்டுள்ளது. இது காருக்கு தேவையான சார்ஜிங்கை சூரிய ஒளி மூலம் பெற்றுக்கொள்ள உதவும். இத்துடன், காரை மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த சோலார் பேனலை சன்ரூஃப்பைப் போல திறந்து கொள்ளவும் முடியும். ஆகையால், இந்த ஓசோன் எலெக்ட்ரிக் காரில் அமர்ந்துக் கொண்டே கடல் மற்றும் இயற்கையின் அழகை உல்லாசமாக ரசிக்க முடியும்.

மேலும், ஒரே பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த சோலார் சன் ரூஃப் மட்டுமின்றி காரின் அனைத்து ஜன்னல்களையும் கட்டுபடுத்த முடியும். இதேபோன்று, தற்போது காட்சிப்படுத்தப்பட்ட ஓசோன் எலெக்ட்ரிக் காரின் பானட், சிங்கிள் பீஸ் முறையில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையால், அதனை திறப்பதற்கான மெக்கானிசம் இல்லை.

தொடர்ந்து, காரின் கேபினுக்குள் டெஸ்லா கார்களில் இருப்பதைப் போன்றே பல்வேறு அம்சங்களே இடம்பெற்றிருக்கின்றன. அந்தவகையில், பெரிய அளவிலான டச் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
இத்துடன், இரு ஒயர்லெஸ் சார்ஜர்கள், ஹெட்ஸ் அப் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது, காரில் பயணிப்பவர்களுக்கு தேவையான தகவல் ஏராளமானவற்றை வழங்கும்.

இத்துடன், இந்த திரைக்கு கீழே ஓர் பொத்தான் வழங்கப்பட்டிருக்கும். அது, காற்றாடியின் வேகம், ஏசியின் அளவு, மியூசிக் சிஸ்டம் போன்ற பல அம்சங்களைக் கன்ட்ரோல் செய்ய பயன்படும். இவற்றுடன், தானியங்கி தொழில்நுட்பமும் இந்த காரில் ஒரு சில அம்சங்களைக் கட்டுபடுத்தும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. உதாரணமாக, அவசர கால அழைப்பு மற்றும் பிரேக்கிங் உள்ளிட்டவற்றை அது செயல்படுத்தும்.

என்னதான் இந்த காரில் இந்தளவிற்கு பல்வேறு பிரிமியம் வசதிகள் வழங்கப்பட்டிருந்தாலும் அது விற்பனைக்கு வரும்போது மலிவான விலையிலேயே களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த காரை இஎம்ஐ திட்டத்தில் விற்பனைச் செய்யவும் ஃபிஸ்கர் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 379 அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பில் மாத தவணைக்கு இது வழங்கப்பட இருக்கின்றது.

அதேசமயம், இந்த காரின் விலை அமெரிக்க டாலர்கள் மதிப்பில் 37,000 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது. இது, தற்போது அமெரிக்காவில் அதீத வரவேற்பைப் பெற்று வரும் டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கி கார்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும் விலையாகும்.

இந்த எஸ்யூவி ரக ஃபிஸ்கர் ஓசோன் எலெக்ட்ரிக் காரின் இந்திய வருகை 2025ம் ஆண்டிலேயே இருக்கும் என கூறப்படுகின்றது. இருப்பினும், இதைக்காட்டிலும் மிக விரைவில் இது அறிமுகமாகிவடலாம் என்ற தகவலும் மறு பக்கம் பரவிக் கொண்டிருக்கின்றது.
ஏனென்றால், இந்தியாவில் இப்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் நிலையங்கள் போன்றவை கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

இதனாலயே உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்களே தங்களின் மின்சார வாகனங்களை இந்தியாவில் களமிறக்க தயக்கம் காட்டி வருகின்றன. மேலும், மின் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஃபம்-2 திட்டமும் சரிவர பயன்படவில்லை என்பதால், மாற்று வழிகள் மூலம் தங்களின் வாகனங்களின் விற்பனை ஊக்குவிக்கும் முயற்சியில் அவை களமிறங்கியுள்ளன.
இருப்பினும், ஃபிஸ்கர் போன்ற ஒரு சில நிறுவனங்கள் துணிச்சலுடன் களமிறங்க காத்திருக்கின்றன.
Source: IAB


Click it and Unblock the Notifications








