பார்ச்சூனர் எஸ்யூவி காரை சாலையில் உருள வைத்த டாடா நெக்ஸான்.. பாதிப்பில்லாமல் தப்பிய பயணிகள்..!
கொரோனா வைரசைவிட ஆபத்து அதிகம் நிறைந்தவை விபத்துகள். ஆனால் பேராபத்தை விளைவிக்கும் இந்த விபத்தில் இருந்து டாடா நெக்ஸான் காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்ற வகையில் கொரோனா வைரஸ் புதிதாக உருவாகியிருக்கின்றது. ஆனால், இதைவிட கொடியதுமாக, மிக எளிதில் மனித உயிர்களை பலி வாங்குவதுமாக பல தசாப்தங்களாக வாகன விபத்துகள் இருந்து வருகின்றன. இதனாலயே வாகனம் சார்ந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடுமையான கெடுபிடிகளைக் காட்டி வருகின்றது.

இருப்பினும், ஒவ்வொரு மணி நேரத்திலும் நாட்டின் ஏதேனும் ஒரு மூலையில் விபத்துகள் அரங்கேறிய வண்ணமே இருக்கின்றது. அந்தவகையில் கடுமையான விபத்தைச் சந்தித்த டாடா நெக்ஸான் காரைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.
இந்த விபத்தில் டாடா நெக்ஸான் காம்பேக்ட் ரக எஸ்யூவி அதை விட மிகப் பெரிய உருவமுடைய டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி காருடன் மோதி விபத்தைச் சந்தித்திருக்கின்றது.

இவ்விரு கார்களுக்கிடையே நடைபெற்ற இந்த விபத்தில் டாடா நெக்ஸான் கார் கடுமையான சேதத்தை சந்தித்திருக்கும் என பெரும்பாலானோர் எதிர்பார்த்திருக்கக்கூடும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக டாடா நெக்ஸான் காரில் பயணித்த அனைவரும் மிகவும் பாதுகாப்பாக, லேசான காயங்களுடன் வெளியேறியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த விபத்து சம்பவத்தில் டாடா நெக்ஸான் மோதியதன் காரணமாக டொயோட்டா ஃபார்ச்சுனர் கார் நான்கு முறைக்கும் மேலாக உருண்டு சென்று கடுமையான சேதத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. ஆனால், நெக்ஸான் காரில் பெரியளவில் சேதம் ஏற்படவில்லை. இதனை விபத்துகுறித்த புகைப்படங்கள் உறுதி செய்துள்ளது.

டாடாவின் இந்த காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த கார் என்ற புகழைச் சூடிய மாடல் ஆகும்.
இந்த கார் அதன் பயணிகளின் பாதுகாப்பில் 5 நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்த தரத்தை இந்தியாவின் எந்தவொரு காரும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேசமயம், டொயோட்டா பார்ச்சூனர் கார் அதிகளவில் சேதமடைவதற்கு முக்கிய காரணமாக இருப்பது, அந்த கார் வந்த வேகம் மற்றும் மோதலைச் சந்தித்த பகுதி உள்ளிட்டவற்றால் இத்தகைய கடுமையான பின் விளை பார்ச்சூனர் அடைந்துள்ளது.

அதாவது, டாடா நெக்ஸான் கார் டொயோட்டா பார்ச்சூனரின் பக்கவாட்டு பகுதியில் வந்த வேகத்திலேயே மோதியிருக்கின்றது. இந்த அதீத அழுத்தத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத காரணத்தினாலயே பார்ச்சூனர் பல முறை சாலையில் உருண்டு கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. இதனால், டொயோட்டா பார்ச்சூனர் காருக்கு ரூ. 11 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இம்மாதிரியான விபத்துகள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பல இணையத்தில் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. அவை விபத்தைப் பற்றியும், அதனால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்காக அவை இணையத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால், பெரும்பாலானோர் இந்த அந்த வீடியோக்களை விழிப்புணர்வு தகவலாக பார்க்காமல், வெறும் பொழுதுபோக்காகவே பார்த்து, கடந்து செல்கின்றனர்.

அவ்வாறாகவே இந்த புகைப்படங்களையும் வழக்கமான புகைப்படங்களாக பார்த்துக் கடந்து செல்லாமல் ஒவ்வொரு பணத்தின்போதும் அதிக கவனத்துடன் செல்ல வேண்டும் என்பதே எங்களது வேண்டுகொள்.
விபத்துகள் தற்போது மனித குலத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசைக் காட்டிலும் மிக கொடியவை.

கொரோனா வைரசுக்கு மாற்று மருந்து கண்டுபிடித்துவிட்டால் அதை நம்மால் கட்டுப்படுத்திவிட முடியும். ஆனால், விபத்துகளை நம்முடைய முழு ஒத்துழைப்பு இல்லாமல் கட்டுப்படுத்த முடியாது. ஆகையால், நம்முடைய தலையாய கடமைகளில் ஒன்றாக போக்குவரத்து விதிகளை எடுத்துக் கொண்டு, போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். இதுவும் நம்முடை கடமை ஆகும்.


Click it and Unblock the Notifications








