டாடா ஹெரியருக்கு போட்டியாக ஃபோர்டு கொண்டுவரும் புதிய எஸ்யூவி கார்... அடுத்த ஆண்டில் அறிமுகமாகிறது..!
வாடிக்கையாளர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள ஃபோர்டு மோட்டார்ஸின் சி-பிரிவு எஸ்யூவி மாடல் 2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஃபோர்டின் இந்த புதிய எஸ்யூவி மாடலை பற்றிய விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த எஸ்யூவி மாடல் தான் ஃபோர்டு- மஹிந்திரா நிறுவனங்களின் கூட்டணியில் அறிமுகமாகும் முதல் தயாரிப்பாகும். இந்த எஸ்யூவி கார் மட்டுமில்லாமல் இந்த கூட்டணியில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 மற்றும் ஃபோர்டு பி745 குறியீட்டு பெயரை கொண்ட மாடல்களும் வெளிவரவுள்ளன.

இந்த புதிய மாடல்களின் அறிமுகங்கள் 2021-22ல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டின் புதிய சி-பிரிவு எஸ்யூவி காரை பொறுத்தவரையில், இது அடுத்த தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500-ன் வழக்கமான மோனோகோக் ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவுள்ளது.

இந்த எஸ்யூவி காருக்கு முன்னதாக அடுத்த ஆண்டின் முதல் கால்பகுதியில் அறிமுகமாகவுள்ள புதிய எக்ஸ்யூவி500 மாடல் ஊரடங்கில் தளர்வு கொண்டுவரப்பட்டதற்கு பிறகு தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் ஃபோர்டு சி-பிரிவு எஸ்யூவி மாடல் இன்னமும் சோதனை ஓட்டங்களை ஆரம்பிக்கவில்லை. ப்ளாட்ஃபாரம் மட்டுமின்றி மஹிந்திராவின் 2021 எக்ஸ்யூவி500 மாடல் சில பாகங்களையும் புதிய ஃபோர்டு எஸ்யூவி மாடலுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் புதிய எக்ஸ்யூவி500 மாடலின் 75 சதவீத பாகங்கள் ஃபோர்டின் புதிய எஸ்யூவி காரிலும் இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. இதன் காரணமாக இரு எஸ்யூவி மாடல்களும் ஒரே தயாரிப்பு லைனில் தான் உருவாக்கப்படவுள்ளன.

இருப்பினும் ஃபோர்ட்டின் ட்ரைவிங் டைனாமிக்ஸிற்காக சற்று மாறுப்பட்ட சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் அமைப்புகளை தங்களது சி-பிரிவு எஸ்யூவி மாடலில் ஃபோர்டு நிறுவனத்தின் பொறியியலாளர்கள் வழங்குவார்கள் என கூறப்படுகிறது. இந்த புதிய ஃபோர்டு எஸ்யூவி மாடலுக்கு 2 என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

இதில் 190 பிஎச்பி மற்றும் 330 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர், 4-சிலிண்டர், எம்ஸ்டாலியன் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும், 180 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடிய 2.0 லிட்டர்/2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜினும் அடங்கும்.

அதேபோல் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு விதமான வெர்சன்களிலும் புதிய ஃபோர்டு எஸ்யூவி மாடல் விற்பனை செய்யப்படவுள்ளது. இவற்றுடன் முன்-சக்கர-ட்ரைவ் மற்றும் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டங்களும் இந்த காருக்கு வழங்கப்படவுள்ளன.

5 மற்றும் 7 என இரு இருக்கை தேர்வுகளில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த எஸ்யூவி மாடலின் விலை புதிய தலைமுறை மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை விட சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும். அறிமுகத்திற்கு பிறகு இந்த எஸ்யூவி மாடலுக்கு எம்ஜி ஹெக்டர், டாடா ஹெரியர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்கள் போட்டியாக விளங்கவுள்ளன.
Note: Images are representative purpose only.


Click it and Unblock the Notifications








