ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்-6 மாடல் விற்பனைக்கு அறிமுகம்... சூப்பரான விஷயம் என்ன தெரியுமா?
ஃபோர்டு எண்டெவர் பிஎஸ்-6 மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் தொழில்நுட்ப அம்சங்கள் வியக்க வைக்கும் அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் விபரங்களை முழுமையாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரிமீயம் எஸ்யூவி மார்க்கெட்டில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இதன் மிரட்டலாான தோற்றம், செயல்திறன் மிக்க எஞ்சின்களுக்காகவே இந்தியாவில் பெரிய ரசிக பட்டாளம் உள்ளது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு அடுத்து விற்பனையிலும் நல்ல இடத்தை பிடித்து வைத்துள்ளது.

இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப புதிய எஞ்சினுடன் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரை ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 158 பிஎச்பி பவரையும், 385 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 197 பிஎச்பி பவரையும், 470 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 3.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைத்து வந்தது.

இந்த நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த இரண்டு டீசல் எஞ்சின்களுமே விற்பனையில் இருந்து விலக்கப்படுகின்றன. இனி ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் புதிய 2.0 லிட்டர் ஈக்கோ புளூ டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 167 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பழைய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலைவிட இந்த எஞ்சின் அதிக செயல்திறனையும், குறைவான மாசு உமிழ்வு தரத்தையும் பெற்றிருக்கிறது.

இந்த எஞ்சினுடன் முக்கிய மாற்றமாக புதிய 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்டு வந்த 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் விலக்கப்பட்டுள்ளது. இதன் ரகத்திலேயே 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட வாகனமாக தன்னை போட்டியாளர்களிடமிருந்து முன்னிலைப்படுத்திக் கொள்கிறது.

பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் 10 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் மட்டுமின்றி, டிசைனில் சிறிய அளவிலான மாற்றங்களை சந்தித்துள்ளது. ஹெட்லைட் க்ளஸ்ட்டர், ஃபாக்ஸ் ஸ்கிட் பிளேட் ஆகியவை முக்கிய மாற்றங்களாக உள்ளன. எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்படுகின்றன. ஹை பீம் மற்றும் லோ பீம் என இரண்டிற்குமே எல்இடி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒளி விரவல் விகிதத்தை 20 சதவீதம் கூடுதலாக்குகிறது.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் 8.0 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதனுடன் சிங்க்-3 தொழில்நுட்பமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன.

புஷ் பட்டன் ஸ்டார்ட், செமி ஆட்டோ பேரலல் பார்க் அசிஸ்ட் தொழில்நுட்பம், ஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில் கேட் ஓபன் வசதி, பார்க்கிங் சென்சார்கள், டியூவல் ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, ரியர் பார்க்கிங் கேமரா, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள் மற்றும் வைப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹில் அசிஸ்ட் மற்றும் ஹில் டிசென்ட் கன்ட்ரோல் வசதிகள் உள்ளன.

புதிய ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவியில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. சில்வர், சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். அதேபோன்று, டைட்டானியம் (2 வீல் டிரைவ்), டைட்டானியம் ப்ளஸ் மற்றும் டைட்டானியம் ( 4 வீல் டிரைவ்) என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய ஃபோர்டு எண்டெவர் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு ரூ.29.55 லட்சம் எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது அறிமுகச் சலுகை விலையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே மாதம் முதல் ரூ.70,000 வரை விலை அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. இதன் சூப்பரான விஷயம், 10 ஸ்பீடு கியர்பாக்ஸ் தேர்வாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படும்.


Click it and Unblock the Notifications








