கொரோனா பிரச்னை... வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ஃபோர்டு!
கொரோனா வைரஸ் பிரச்னையால் எழுந்துள்ள நிலைமையை கருத்திக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு பல முக்கிய அறிவிப்புகளை ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

கொரோனா பிரச்னையால் கார், பைக் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வாரண்டி காலம் நீட்டிப்பு, சர்வீஸ் காலத்திற்கு கூடுதல் அவகாசம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில், ஃபோர்டு கார் நிறுவனம் முக்கிய அறிவிப்புகளை தனது வாடிக்கையாளர்களுக்காக வெளியிட்டு இருக்கிறது.

அதன்படி, கடந்த மார்ச் 15ந் தேதி முதல் மே 30ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில் வாரண்டி காலாவதியாகும் வாடிக்கையாளர்கள் அதனை ஜூன் 30ந் தேதி வரை பயன்படுத்துவதற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கூடுதல் காலத்திற்கு வாரண்டி வாங்க திட்டமிட்டிருப்போரும் வரும் ஜூன் 30ந் தேதிக்குள் தங்களது வாரண்டி காலத்தை நீடித்து கொள்வதற்கான கால அவகாசமும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, இந்த காலத்தில் இலவச கார் சர்வீஸ் திட்டங்களை வைத்திருப்போருக்கும் ஜூன் 30ந் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டு இருக்கிறது. எனவே, இலவச சர்வீஸ் காலாவதியாகிவிடும் என்ற அச்சம் இப்போதைக்கு தேவையில்லை.

மற்றொரு முக்கிய அறிவிப்பாக, வரும் 30ந் தேதி வரை கார் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு விலை ஏற்றம் இல்லாமல் கார் டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் ஃபோர்டு தெரிவித்துள்ளது. அதாவது, முன்பதிவு செய்து காத்திருப்பு காலத்தின்போது, விலை ஏறினாலும், வரும் 30ந் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு விலை ஏற்றம் பொருந்தாது.

வாடிக்கையாளர்களின் சந்தேகங்கள் மற்றும் இதர விஷயங்கள் குறித்த தகவல்களை பெறுவதற்காக தனது வாடிக்கையாளர் மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாகவும் ஃபோர்டு கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. போன், சமூக வலைதளங்கள் மற்றும் இமெயில் மூலமாக தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

அதேபோன்று, வாடிக்கையாளர்களுக்கான அவசர சாலை உதவி வழங்குவதற்கான சேவையும் 24 மணிநேரமும் வழங்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சாலை அவசர உதவி திட்டத்தில் சேராத தனது வாடிக்கையாளர்களுக்கும் ஊரடங்கு காலம் வரை அவசர உதவி சேவையை வழங்கப்படும் என்று ஃபோர்டு அறிவித்துள்ளது.

வாரண்டி காலாவதி, வாரண்டி கால நீட்டிப்பு, இலவச சர்வீஸ், சாலை அவசர உதவித் திட்டம் உள்ளிட்ட அனைத்து விதமான சந்தேகங்களையும் எந்த நேரத்திலும் வாடிக்கையாளர் சேவை மையம் மூலமாக பெறலாம் என்றும் ஃபோர்டு இந்தியா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








