பெர்ஃபார்மென்ஸ் கார்களை இந்தியாவில் களமிறக்க ஃபோர்டு திட்டம்... பட்டியலில் பிரான்கோ!
பெர்ஃபார்மென்ஸ் வகை கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்குவதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்திய வர்த்தகத்தை வலுவாக்கும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்திய வர்த்தகத்தை மஹிந்திராவுடன் இணைந்து மேற்கொண்டு வரும் அந்நிறுவனம், புதிய எஸ்யூவி மாடல்களை வரிசைகட்ட திட்டமிட்டுள்ளது.

இந்த சூழலில், இந்தியாவில் தனது பெர்ஃபார்மென்ஸ் வகை கார் மாடல்களை கொண்டு வருவதற்கு ஃபோர்டு கார் நிறுவனம் பரிசீலித்து வருவதாக ஆட்டோ எக்கனாமிக் டைம்ஸ் தளம் செய்தி தெரிவிக்கிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் பிரபலமான ரேஞ்சர் பிக்கப் டிரக், பிரான்கோ ஆஃப்ரோடு எஸ்யூவி, ஃபோகஸ் ஆர்எஸ் மற்றும் மஸ்டாங் எலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட மாடல்கள் இந்தியாவில் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.
மேலும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மஸ்டாங் கார் மாடல் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல்கள் மற்றும் உயர்வகை பிரிமீயம் பிக்கப் டிரக் மாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைக்கத் துவங்கி இருக்கிறது. மேலும், செயல்திறன் மிக்க மாடல்களுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது.

மேலும், இந்தியாவுக்காக எந்த மாற்றங்களும் செய்யாமல் எந்த ஒரு கார் மாடலையும் முதல் 2,500 யூனிட்டுகளை நேரடியாக இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கும் அரசு அனுமதி இருக்கிறது. இதனை பயன்படுத்தி, இந்த கார் மாடல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு ஃபோர்டு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை மனதில் வைத்து இந்த புதிய மாடல்கலை கொண்டு வருவதற்கு ஃபோர்டு கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், எதிர்காலத்தில் கொண்டு வரப்பட உள்ள புதிய கார் மாடல்கள் குறித்த எந்த தகவலையும் தெரிவிக்க இயலாது என்று ஃபோர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியில் புதிய எஸ்யூவி மாடல்களை கொண்டு வருவதற்கு ஃபோர்டு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனினும், அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த செயல்திறன் மிக்க ஃபோர்டு கார்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








