கொரனோ அச்சம்... சென்னை ஃபோர்டு கார் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்
கொரோனா பரவி வருவதையடுத்து, சென்னையில் செயல்பட்டு ஃபோர்டு கார் ஆலையில் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகையை ஆட்டுவித்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும், தொழில்துறையும் முடங்கியிருக்கின்றன. மேலும், மக்கள் வெளியே வந்தால், கொரோனா தொற்றிக் கொள்ளும் அபாயம் இருப்பதால், பெரு நகரங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால், அலுவலகங்கள், வியாபார ஸ்தலங்கள், தொழிற்சாலைகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக, உலக அளவில் கார் உற்பத்தியும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் பல முன்னணி கார் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் 31ந் தேதி வரை சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனால், பல்வேறு தொழில் ஸ்தாபனங்கள் மூடப்பட்டுள்ளன. பணியாளர்கள் வந்து செல்வதிலும் பெரும் பிரச்னையும், கொரனோ பரவும் அச்சமும் இருக்கிறது.

இந்த காரணங்களை வைத்து, சென்னையில் செயல்பட்டு வரும் ஃபோர்டு கார் நிறுவனத்தின் ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 2 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும்.

இதேபோன்று, குஜராத் மாநிலம் சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள ஃபோர்டு கார் ஆலையிலும் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வரும் 29ந் தேதி இந்த இரண்டு கார் ஆலைகளிலும் உற்பத்தி பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த இரு தொழிற்சாலைகளிலும் 10,000 பேர் பணிபுரிகின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ந் தேதிக்கு பின்னர் நிலவரத்தை பொறுத்து, ஆலை திறப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








