கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்கிய சென்னை ஃபோர்டு கார் ஆலை!
கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி காண்பதற்கான முயற்சிகளில் சென்னையிலுள்ள ஃபோர்டு கார் ஆலையும் களமிறங்கி உள்ளது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கண்ணுக்கு எதிரியாக புகுந்து மனிதர்களை துவம்சம் செய்து வரும் கொரோனா வைரஸை ஒழித்துக் கட்டும் முயற்சிகளில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன. அந்தந்த நாட்டு அரசுகளுக்கு பெரு நிறுவனங்கள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. குறிப்பாக, கார் உற்பத்தி நிறுவனங்கள் பல முக்கிய பங்களிப்புகளை வழங்கி வருகின்றன.

அந்த வகையில், ஃபோர்டு கார் நிறுவனமும் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்திய மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கான முயற்சிகளில் களம் புகுந்துள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் உள்ள தனது கார் ஆலைகளில் முக கவசங்களை தயாரிக்கும் பணிகளை துவங்கி இருக்கிறது.

கொரோனா சிகிச்சையில் மையங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு இந்த முக கவசங்கள் வழங்கப்படும்.

இந்த முக கவசங்களை ஃபோர்டு நிறுவனத்தின் இந்திய பொறியாளர்கள் குழு வடிவமைத்துள்ளது. கொரோனா சிகிச்சை களப்பணியில் ஈடுபட்டுள்ளோர் நலன் கருதி, அவர்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் முக கவசங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இதுதவிர்த்து, கொரோனா எதிர்ப்புக்காக பல்வேறு நாட்டின் அரசுகள் மற்றும் மக்களுக்கு 1 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதி மற்றும் இதர உதவிகளை செய்வதற்கும் ஃபோர்டு கார் குழுமம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் சந்தைப்படுத்துதல், விற்பனை மற்றும் சர்வீஸ் பிரிவு இயக்குனர் வினய் ரெய்னா கூறுகையில்,"எங்களது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு எங்களால் முடிந்த அளவுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதி உதவிகளை அளிப்பதற்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பிரச்னை காரணமாக, காலாவதியாகும் வாரண்டி மற்றும் இலவச சர்வீஸ் திட்டங்களை வரும் ஜூன் 30ந் தேதி வரை ஃபோர்டு கார் நிறுவனம் நீட்டித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








