இந்திய கார்களுக்கான க்ராஷ் டெஸ்ட் விதிமுறையை கடுமையாக்கும் குளோபல் என்சிஏபி!
இந்திய கார்களை க்ராஷ் டெஸ்ட் செய்வதற்கான பாதுகாப்பு விதிகளை மேலும் கடுமையாக்க குளோபல் என்சிஏபி அமைப்பு முடிவு செய்துள்ளது.

கார்களின் பாதுகாப்பு தரத்தை அறிந்து கொள்ளும் வகையில், க்ராஷ் டெஸ்ட் எனப்படும் மோதல் சோதனைகளை நடத்தி முடிவுகளை வெளியிட்டு வருகிறது குளோபல் என்சிஏபி அமைப்பு. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களையும் மோதல் சோதனைகளுக்கு உட்படுத்தி முடிவுகளை அறிவித்து வருகிறது.

இதில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பல கார் மாடல்கள் குறைந்தபட்ச தரத்தில் கூட இல்லாமல் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த 2014ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு பாதுகாப்பான கார்கள் என்ற கொள்கையின் கீழ் தொடர்ந்து கார்களுக்கு மோதல் சோதனைகளை குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தி வருகிறது.

மேலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களை மோதல் செய்வதற்கு பிரத்யேக பாதுகாப்பு வழிகாட்டு முறைகளையும் பின்பற்றி வருகிறது.இதனிடையே, கார்களின் பாதுகாப்பு தரத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

அடிப்படையான பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் கட்டாயமாக்கப்பட்டது. இதனால், கார் நிறுவனங்களும் பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்தன. மேலும், குளோபல் என்சிஏபி அமைப்பின் வழிகாட்டு முறைகளுக்கு இணையான தரத்தில் கார்களை உருவாக்க முனைந்தன.

டாடா, மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் கார்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டன. இதனால், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 உள்ளிட்ட முன்னணி கார் மாடல்கள் அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்றன.

இந்த சூழலில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் பாதுகாப்பு தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக, க்ராஷ் டெஸ்ட் விதிகளை கடுமையாக்க குளோபல் என்சிஏபி அமைப்பு முடிவு செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளத்தின் செய்தி மூலமாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களை மோதல் சோதனைக்கு உட்படுத்துவதற்கு கூடுதல் பாதுகாப்பு முறைகளை சேர்ப்பது கட்டாயமாக்கப்பட உள்ளது. இதன்படி, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் இடம்பெறுவது அவசியமாக இருக்கும்.

இதுமட்டுமின்றி, பக்கவாட்டு மோதல் சோதனைகளை நடத்தவும், அதற்கான வழிகாட்டு முறைகளை வகுக்கவும் குளோபல் என்சிஏபி அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வரும் ஜனவரி முதல் இந்த புதிய வழிமுறைகள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை மனதில் வைத்து, 2022ம் ஆண்டு ஜனவரியில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு குளோபல் என்சிஏபி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த புதிய முறை செயல்பாட்டுக்கு வரும்போது, ஐரோப்பிய என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளுக்கு இணையான தரத்திற்கு இந்திய கார்களுக்கான பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் குளோபல் என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்மூலமாக, இந்திய கார்களின் பாதுகாப்பு தரத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








