வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு பரிசீலனை!
வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கொரோனா பிரச்னை காரணமாக, வாகன உற்பத்தி மற்றும் விற்பனைத் துறை பெரிய அளவிலான பாதிப்புகளை சந்தித்துள்ளது. வரலாற்றில் இல்லாத வகையில், கெரோனா காரணமாக பெரிய பொருளாதார இழப்புகளை வாகனத் துறை சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், வாகனத் துறை வளர்ச்சியை கருத்தில்கொண்டு சில சலுகைகளை வழங்குவதற்கு வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பை செய்யவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், இருசக்கர வாகனங்கள் மீதான வரியை தற்காலிகமாக குறைப்பதற்கு பரிசீலித்து வருவதாக சில தினங்களுக்கு முன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு எதுவும் வரவில்லை.

இந்த சூழலல், இன்று இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பின் 60வது ஆண்டு கருத்தரங்கள் நடந்தது. இதில், பங்கேற்று பேசிய மத்திய கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்,"வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை தற்காலிகமாக குறைப்பதற்கு சியாம் அமைப்பு விடுத்துள்ள கோரிக்கை குறித்து பிரதமர் மற்றும் நிதி அமைச்சருடன் ஆலோசனை நடத்த உள்ளேன்.

இதுதொடர்பான நடைமுறைகள் குறித்து நிதி அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிது. விரைவில் இதுதொடர்பாக நல்ல செய்தி வரும் என்று நம்புகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பழைய வாகனங்கள அழிப்பது குறித்த திட்டம் குறித்து அனைத்து கருத்துக்களும் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பான, அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் ஜவடேகர் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 10 சதவீதம் வரை தற்காலிகமாக குறைக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இது நடைமுறைப்படுத்தினால், வாகனங்கள் விலை வெகுவாக குறையும்.

இதனால், வாகனங்களை வாங்கும் ஆர்வம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்கும். மேலும், வாகன விற்பனை பழைய நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று வாகன நிறுவனங்களும், வாடிக்கையாளர்களும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








