சார்ஜ் பற்றி கவலை வேண்டாம்... இனி எலெக்ட்ரிக் காரில் இந்தியாவின் எந்த மூலைக்கும் செல்லும் வாய்ப்பு?
எலெக்ட்ரிக் காரில் சார்ஜ் பற்றி கவலை இல்லாமல், இந்தியாவின் எந்த மூலைக்கும் பயணிப்பதற்கான கட்டமைப்பை நிறுவுவதற்கான சூப்பர் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் பெரு நகரங்களில் காற்று மாசுபாடு அபாய கட்டத்தை எட்டி இருக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக மக்களின் உடல் நலத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதுடன், பருவ நிலையிலும் அபாயகரமான மாற்றங்கள் ஏற்படத் துவங்கி இருக்கின்றன.

இதனை மனதில் வைத்து பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க உலகின் பெரும்பாலான நாடுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. மேலும், புகையில்லாத மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதனை மனதில் வைத்து, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு சிறப்புத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.

எனினும், மின்சார வாகனங்களின் விலை அதிகமாக இருப்பதுடன், வாங்க விரும்பினாலும் சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு போதிய அளவு இல்லாததால், பலரும் தவிர்த்து வருகின்றனர். இதனை மனதில் வைத்து மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. ஆனால், அது போதிய அளவை எட்டுவதற்கு அடுத்த சில ஆண்டுகள் பிடிக்கும் நிலை உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கு அதிரடியான திட்டம் ஒன்றை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையங்கள் கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் பங்கேற்றார்.

அப்போது அவர் அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய ஆலோசனையை வழங்கி இருக்கிறார். அதன்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நேரடியாக நடத்தும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் நிலையத்தை அமைக்க ஆலோசனை வழங்கி உள்ளார்.

மேலும், தனியார் நடத்தும் பெட்ரோல் நிலையங்களிலும் மின்சார வாகன சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க அவர் வலியுறுத்த கேட்டுக் கொண்டுள்ளார். ஒவ்வொரு பெட்ரோல் நிலையத்திலும் குறைந்தது ஒரு சார்ஜ் ஏற்றும் கட்டமைப்பு வசதி இருக்க வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறி இருக்கிறார்.

அதன்படி, பெட்ரோல் நிலையங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளில் சார்ஜ் ஏற்றும் நிலையம் வசதி இருப்பது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நாடுமுழுவதும் 69,000 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை அனைத்திலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜ் ஏற்றும் வசதி கூடிய விரைவில் ஏற்படுவதற்கான வாய்ப்பு அருகி வருகிறது.

அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் சார்ஜ் ஏற்றும் வசதி கொண்டு வரப்பட்டால், அது மின்சார வாகன பயன்பாட்டை வெகுவாக உயர்த்த வழிகோலும். குறிப்பாக, ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிப்போர், சுற்றுலாப் பயன்பாடு உள்ளிட்டவற்றிலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கும்போது உதிரிபாகங்களின் விலை குறைய வாய்ப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








