இனி பெட்ரோல் நிலையத்தில் கியூ கட்டி நிற்க வேண்டாம்... மத்திய அரசின் சூப்பர் முடிவு!
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில்கொண்டு, பெட்ரோல் நிலையத்தில் வரிசை கட்டி நின்று பெட்ரோல் போடும் நிலையை மாற்றுவதற்கான சூப்பர் முடிவு ஒன்றை மத்திய அரசு எடுக்க உள்ளது.

கொரோனா பிரச்னையால் கடந்த மார்ச் 24 முதல் தேசிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விதிகள் கடுமையாக்கப்பட்டதால், வாகனப் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இதனால், பெட்ரோல், டீசல் நுகர்வும் முற்றிலும் பாதித்தது. அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டன.

இதனால், கடந்த மாதத்தில் எரிபொருள் நுகர்வு 70 சதவீதம் குறைந்தது. இந்த நிலையில், ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டாலும், வைரஸ் தொற்று குறைவானப் பகுதிகளில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால், வாகன எரிபொருள் நுகர்வும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது.

இந்த நிலையில், சமூக இடைவெளி பிரச்னை மற்றும் வீடுகளில் இருக்கும் மக்களுக்கு எளிதாக எரிபொருள் கிடைக்க வழிவகை செய்வதற்கான முயற்சிகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதன்மூலமாக பெட்ரோல் நுகர்வை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, வீடுகளிலேயே பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருட்களை வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக எண்ணெய் நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் டீசலை டோர் டெலிவிரி செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

இந்த நிலையில், தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருட்களையும் டோர் டெலிவிரி செய்வதற்கான திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. மேலும், ஒரே பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, எல்பிஜி என அனைத்து வகை வாகன எரிபொருட்களும் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டாடா குழுமம் முதலீடு செய்துள்ள புனே நகரை சேர்ந்த ரெப்போஸ் எனெர்ஜி நிறுவனம் எரிபொருட்களை வீடுகளில் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 3,200 நடமாடும் பெட்ரோல் நிலையங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








