இந்தியாவிடமிருந்து நல்ல செய்தி வரும்... நம்பிக்கையுடன் காத்திருக்கும் கிரேட்வால் மோட்டார்ஸ்!
இந்தியாவிடம் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய கார் சந்தையில் களமிறங்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது ஹவல் பிராண்டு கார் மாடல்களை இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது.

இதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் ஆலையை கையகப்படுத்தி கார் உற்பத்தியை துவங்க கிரேட்வால் மோட்டார்ஸ் திட்டமிட்டது. அத்துடன், கார் உற்பத்தி, விற்பனை மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்காக இந்தியாவில் 1 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.7,500 கோடி) முதலீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்தது.

இந்த நிலையில், லடாக் பிராந்தியத்தில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய நிலப்பரப்பில் நுழைந்து அடாவடியில் ஈடுபட்டது. இதனால், ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இதனையடுத்து, சீனாவிற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை இந்தியா துவங்கியது.

அதன்படி, சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்கு சிறப்பு அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியது. மேலும், கிரேட்வால் உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடுகளை நிறுத்தி வைக்கவும் மஹாராஷ்டிர அரசு மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதையடுத்து, கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக கிரேட்வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறி இருப்பதாவது,"எமது நிறுவனம் உலகளாவிய வர்த்தகத்தை கொண்டது. மேக் இன் இந்தியா திட்டத்தில் இணைந்து பங்காற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்திய பொருளாதார வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளோம். தகுதியான பணியாளர்களுக்கும், சூழலுக்கும் ஏற்ப வேலைவாய்ப்புகளை அனைத்து மட்டத்திலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்க முடியும்.

இந்திய அரசின் அனைத்து சட்டத் திட்டங்களுக்கும் ஏற்ப முதலீட்டு ஒப்பந்தத்தை ஏற்கவும் முடிவு செய்துள்ளோம். முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசிடம் இருந்து நல்ல செய்தி வரும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications








