இந்தியாவின் பச்சை கொடிக்காக காத்திருக்கும் சீன நிறுவனம்! வாலாட்டும் முன் கொஞ்சம் யோசிச்சிருக்கலாம்!
இந்தியாவின் பச்சைக் கொடிக்காக சீன நிறுவனம் ஒன்று காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த இந்தியர்களையும் கவருகின்ற வகையில் ஓர் தகவல் வெளியாகியது. அது மின்சார வாகனம் பற்றிய தகவல் ஆகும். சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் கிரேட் வால் மோட்டார்ஸ், இந்தியாவில் உலகின் மிக மிக குறைந்த விலைக் கொண்ட மின்சாரக் காரை களமிறக்க இருப்பதாக அறிவித்திருந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கே சவால்விடும் வகையில் அதன் விலை இருக்குமென கூறப்பட்டது. இந்த தகவல் ஒட்டுமொத்த இந்தியர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தைத் தூண்டியது. குறிப்பாக மின் வாகன பிரியர்களின் ஆர்வத்தை கிரேட் வால் மோட்டார்ஸின் அறிவிப்பு மிகக் கடுமையாகவே தூண்டியது.

எனவே, அனைவரின் எதிர்பார்ப்பும் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்திய வருகையை நோக்கிக் காத்துக் கொண்டிருந்தது. இம்மாதிரியான நேரத்தில், இந்திய எல்லையில் பணியாற்றிக் கொண்டிருந்த ராணுவ வீரர்களிடம் சீன வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதில் இந்திய வீரர்கள் சிலர் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் இந்த அடாவடித் தனம் நாடு முழுவதும் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலி கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அரங்கேற்றத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. இந்நிறுவனம், மஹாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதன் உற்பத்தியாலையைத் தொடங்க இருந்தது. இம்மாநில அரசே சீன வீரர்களின் அத்துமீறலைக் காரணம்காட்டி கிரேட் வால் மோட்டார்ஸின் உதயத்திற்கு முட்டுக்கட்டைப் போட்டது. இதுமட்டுமின்றி, அம்மாநிலத்தில் அமையவிருந்த பிற சீன நிறுவனங்களின் முதலீட்டிற்கும் தடை விதித்தது.

ஒட்டுமொத்த 3 சீன நிறுவனங்களின் மூலம் ரூ. 5,020 கோடி மதிப்பில் மஹாராஷ்டிராவிற்கு முதலீடு கிடைக்கவிருந்தது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், தேசப்பற்று காரணமாக ஒட்டுமொத்த முதலீட்டிற்கு அது அம்மாநிலம் தடையை விதித்தது. இருப்பினும், சீன நிறுவனங்கள் விடா முயற்சியுடன் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து, ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவின் பச்சைக் கொடிக்காக காத்துக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
சீனாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளராக கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் இருந்து வருகின்றது. இந்நிறுவனம், இந்தியாவில் குறைந்த விலை மின்சார வாகனம் மட்டுமின்றி மேலும் பல வாகனங்களைக் களமிறக்க திட்டமிட்டிருந்தது.

இந்நிறுவனம், எஸ்யூவி கார் தயாரிப்பில் பெயர்போன நிறுவனமாக இருந்து வருவது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், தனது புகழ்வாய்ந்த கார்களையே அந்நிறுவனம் இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டிருந்தது. இதற்காக, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 950 மதிப்புள்ள தலேகான் உற்பத்தி ஆலையை அது வாங்கியது. இங்கு வைத்தே புகழ்வாய்ந்த வாகனங்களைத் தயாரிக்க அது திட்டமிட்டது.

ஆனால், கிரேட் வால் மோட்டார்ஸ் ஆரம்ப புள்ளி வைப்பதற்கு முன்னதாக முற்றுப் புள்ளி வைக்க வைத்துவிட்டது இரு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல். இதைத்தொடர்ந்து, உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறும் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதுவரை ஒட்டுமொத்தமாக சீன நிறுவனங்களிடத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட மறு அனுமதிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இதில் சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் மட்டுமின்றி சங்கன், செர்ரி மற்றும் ஹெய்மா உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும். நிறுவனங்களின் இந்த கோரிக்கையை ஆய்வு செய்யும் பணியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒப்புதல் கிடைத்துவிட்டால் உடனடியாக கிரேட் வால் மோட்டார்ஸ் தனது வாகன தயாரிப்பு பணியைத் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது.

இந்நிறுவனம், இந்தியாவில் அதன் தயாரிப்புகளை 2021ம் ஆண்டிற்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த இலக்கை செயல்படுத்தும் விதமாகவே பிற நிறுவனங்களைக் காட்டிலும் அதிக கோரிக்கையை கிரேட் வால் மோட்டார்ஸ் முன் வைத்து வருகின்றது.


Click it and Unblock the Notifications