கைவிரித்த மஹிந்திரா... நொடித்து நிற்கும் சாங்யாங்.. முதலீடு செய்ய முன்வந்த அமெரிக்க நிறுவனம்!
கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சாங்யாங் கார் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு அமெரிக்காவை சேர்ந்த Haah ஹோல்டிங்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த சாங்யாங் மோட்டார் நிறுவனம் எஸ்யூவி வகை கார் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று. கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்த சாங்யாங் மோட்டார் நிறுவனத்தில் மஹிந்திரா நிறுவனம் பெரும்பான்மை பங்குகளை வாங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இந்த நிலையில், கொரோனா சூழலுக்கு பிறகு வர்த்தகத்தில் பல அதிரடி மாற்றங்களை மஹிந்திரா செய்து வருகிறது. அதன்படி, நிதி நெருக்கடியில் தொடர்ந்து தத்தளித்து வரும் வர்த்தகப் பிரிவுகளை மூட முடிவு செய்தது. அதன்படி, தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும், சாங்யாங் மோட்டார் நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது.

சாங்யாங் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சில நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், சாங்யாங் நிறுவனத்திற்கு இருக்கும் நிதி சிக்கல் மற்றும் வளர்ச்சியை கருத்தில்கொண்டு பல முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த Haah ஹோல்டிங்ஸ் நிறுவனம் சாங்யாங் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சாங்யாங் நிறுவனத்தில் 258 மில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.1,900 கோடி) முதலீடு செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் Haah ஹோல்டிங்ஸ் நிறுவனம் நிபந்தனைகளுடன் கூடிய முதலீட்டு திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் தள செய்தி தெரிவிக்கிறது.

இதனிடையே, சாங்யாங் மோட்டார் நிறுவனம் ஜே.பி.மார்கன், பிஎன்.பி.பரிபாஸ், பேங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட வங்கிகளில் 322 மில்லியன் டாலர்களை கடனாக வாங்கி இருக்கிறது. ஒருவேளை, மஹிந்திரா நிறுவனம் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்தால், புதிய நிறுவனம் கையகப்படுத்துவதற்கு முன்னதாக சாங்யாங் சார்பில் வங்கியில் பெற்றிருக்கும் கடன்களை முழுமையாக செலுத்த வேண்டி இருக்கும்.

எனவே, சாங்யாங் நிறுவனத்தை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை தக்க வைக்கும் வகையில், குறைந்தது 51 சதவீத பங்குகளை மஹிந்திரா தக்க வைக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. இதன்மூலமாக, வங்கிக் கடன்களை திருப்பி செலுத்துவதில் வழக்கமான கால அவகாசத்தை தக்க வைக்க முடியும். மறுகடன் பெறுவதிலும் எந்த சிக்கலும் இருக்காது என்று பிற முதலீட்டாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே, சாங்யாங் நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கும் அளவிற்கு Haah ஹோல்டிங்ஸ் நிறுவனத்திடம் சாங்யாங் நிதி நெருக்கடியை தீர்க்கும் அளவுக்கு பெரிய பொருளாதார பலம் இல்லை. சீனாவின் செர்ரி நிறுவனத்தின் கார்களை அசெம்பிள் செய்து VANTAS என்ற பிராண்டு பெயரில் Haah நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

தற்போது 23 பில்லியன் தென்கொரிய வோன் மதிப்பில் வர்த்தகம் செய்து வரும் Haah நிறுவனம் சாங்யாங் மோட்டார் நிறுவனத்தில் குறிப்பிட்ட அளவு மட்டுமே பங்குகளை வாங்க முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. மறுபுறத்தில் வர்த்தகத்தை சீரான நிலையில் கொண்டு செல்வதற்கு 500 பில்லியன் வோன் மதிப்பிலான முதலீடு சாங்யாங் நிறுவனத்திற்கு தேவைப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








