"மக்கள்தான் முக்கியம் - பேருந்துகளை மருத்துவமனையாக மாற்றுங்கள்".. மாநில அரசு அதிரடி..
கொரோனா வைரசின் பரவும் தன்மை தீவிரமடைந்து வரும்நிலையில் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தற்காலிக மருத்துவமனைகளாக அரசு பேருந்துகள் மாற்றப்பட இருக்கின்றன. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் நாம் காணலாம்.

உலக நாடுகள் அனைத்தையும் தனது கோர பிடியால் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றது உயிர் கொல்லி கொரோனா வைரஸ். இது அறிவிக்கப்படாத போரை மனித இனத்திற்கு எதிராக தொடுத்திருப்பதால், உலக நாடுகள் அனைத்தும் அதை எதிர்த்துப் போராடி வருகின்றன.

எதிரி கண்களுக்குப் புலப்படாதவன் என்பதாலும், இதுவரை மனித இனமே அறிந்திராத ஓர் புதிய வகை வைரஸ் என்பதாலும் இந்த போரில் வெற்றிக் காண்பது சற்று சிரமமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
எனவே, தற்போது எதிரியிடம் இருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேசமயம், வைரசுக்கு எதிரான போரையும் உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்தவகையில், இந்தியாவிலும் கொடிய வைரசுக்கு எதிரான போர் நாளுக்கு நாள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில், ஒவ்வொரு மாநிலத்திலும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மீண்டும் நீட்டிக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளும் கணிசமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் மிகப்பெரிய சிக்கல் நிலவுகின்றது. பொது மருத்துவமனை பற்றாக் குறைதான் அது.

எனவே, தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கும் பணியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அந்தவகையில், ரயில்வேத்துறை ரயில்பெட்டிகளை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றி அறிமுகம் செய்தன. அதில், நோயாளிக்கென தனியறை, கழிவறை என சகல வசதிகளும் உருவாக்கப்பட்டிருந்தன.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஓர் மாநில அரசு அதன் பொது போக்குவரத்து வாகனங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.
இந்தியாவை பொருத்தவரை முதன்மையான பிரச்னைகளில் ஒன்றாக மருத்துவமனைப் பற்றாக்குறை இருக்கின்றது. இதனைத் தீர்க்கும் விதமாகவே ஹரியானா மாநில அரசு, இந்த தனித்துவமான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

இந்த பேருந்துகளை மொபைல் கிளினிக்குகளாகவும் பயன்படுத்திக் கொள்ள அது திட்டமிட்டு வருகின்றது. இதற்காக, ஒரு மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் அந்த பேருந்தில் நிறுவப்பட இருக்கின்றன.

குறிப்பாக, கொரோனா வைரஸ் தாக்குதல் உடைய நபர்களுக்கு தேவைப்படும் அதி முக்கியத்துவம் வாய்ந்த கருவிகளில் ஒன்றான வென்டிலேட்டர்கள் உள்ளிட்டவை கட்டாயம் இருக்க வேண்டும் என அம்மாநில தலைமைச் செயலாளர் கெஷானி ஆனந்த் அரோரா உத்தரவிட்டுள்ளார்.

இத்துடன் பிபிஇ எனப்படும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்களும் அனைத்தும் போதியளவில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.
இந்த மொபைல் மருத்துவமனைகள் மருத்துவமனை வசியற்ற பகுதிகளில் பயன்படுத்தும்படி நிலை நிறுத்தப்பட இருக்கின்றன.

அதுமட்டுமின்றி, மக்கள் கூட்டம் அதிகம் ஏற்படாத வண்ணம் சில முக்கிய மருத்துவமனைகளுக்கு அருகிலும் அவைப் பயன்படுத்தப்பட இருக்கின்றன.
இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் சனிக்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், ஹரியானா மாநில அரசு இந்த பணியில் தீவிரமாக களமிறங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








