ஹவல் விஷன் 2025 கான்செப்ட்... கனவு தொழில்நுட்பங்களின் சங்கமம்!
சீனாவை சேர்ந்த கிரேட்வால் மோட்டார் நிறுவனம் தனது கீழ் செயல்படும் ஹவல் மற்றும் ஓரா கார் பிராண்டுகளை சேர்ந்த 13 புதிய கார் மாடல்களை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தி இருந்தது. இதில், ஹவல் பிராண்டில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஹவல் விஷன் 2025 என்ற எஸ்யூவி கான்செப்ட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

எதிர்காலத்தில் ஹவல் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி மாடல்களின் டிசைன் அம்சங்களுக்கு அடித்தளமாக இந்த புதிய கான்செப்ட் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த ஷாங்காய் சர்வதேச வாகனக் கண்காட்சியில் இந்த புதிய கார் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த கான்செப்ட் மாடலை கிரேட்வால் மோட்டார் நிறுவனம் இந்தியர்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. வெள்ளை வண்ணத்தில் காட்சி தந்த இந்த ஹவல் எஸ்யூவி கான்செப்ட் முதல் பார்வையிலேயே கவர்ந்து இழுக்கும் அம்சங்களை பெற்றிருக்கிறது.

முகப்பில் மிக மெல்லிய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், நேர்த்தியான க்ரில் அமைப்பு, வலிமையான பம்பர் தோற்றம் ஆகியவை முகப்பை பார்த்தவுடன் மிக வசீகரமாக இருக்கிறது. அதேபோன்று, இதன் பிரம்மாண்ட அலாய் சக்கரங்கள், வலிமையான பாடி, பின்புறத்தில் அழகிய டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள் மற்றும் இரண்டுமே இணைந்தாற்போல் டிசைன் செய்யப்பட்டு இருப்பதும் முக்கிய விஷயமாக இருக்கும்.

சீன கார்கள் என்றாலே, தொழில்நுட்ப அம்சங்களில் ஒருபடி மேலே இருக்கும் என்பதை தெரிவிக்கும் விதமாக, இந்த காரிலும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே திரை வழங்கப்பட இருக்கிறது. மேலும், முகம் மற்றும் கை ரேகையை வைத்து காரை திறந்து பூட்டும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த காரில் அடுத்த முக்கிய விஷயமாக, சைடு மிரர்களுக்கு பதிலாக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டேஷ்போர்டில் இருக்கும் திரை மூலமாக பக்கவாட்டிலும், பின்னால் வரும் வாகனங்களையும் எளிதாக பார்த்து காரை ஓட்டுவதற்கு வழி வகை செய்யும்.

இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் நேரடி இணைய வசதியும், மேலும் காரின் இயக்கம் மற்றும் ஓட்டுதல் தொழில்நுட்பங்களை மொபைல்போன் செயலி மூலமாக பெறும் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கார் இருப்பிடத்தை முப்பரிமாண முறையில் காட்டும் வசதி, தானியங்கி முறையில் பார்க்கிங் செய்யும் வசதி, டிரைவிங் மோடுகள், கார் செல்லும்போதே ஷாப்பிங் செய்யும் வசதிகளும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

மொத்தத்தில் இந்த கார் ஆட்டோ எக்ஸ்போ வரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் இதன் அடிப்படையில் புதிய எஸ்யூவி மாடல் வருவதற்கான வாய்ப்பு உள்ளதால், இந்த கார் மீது இந்தியர்களின் மனதில் தனி கவனம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








