கட்டணத்தை தீர்மானிக்கும் செல்போன் செயலி! கட்டண கொள்ளைக்கு முற்று புள்ளி வைக்க பேருந்து கழகம் அதிரடி!
கட்டண கொள்ளைக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக செல்போன் செயலி ஒன்றை தயாரிக்க எச்ஆர்டிசி முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

கடந்த சில தினங்களாகவே இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாம் எதிர்பார்த்திராத அளவிற்கு உயர்ந்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையைத் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள், தங்களின் வசதிக்கேற்ப கட்டணத்தை உயர்த்திக் கொள்கின்றன.

இதனால், கொரோனாவால் ஏற்கனவே அதிக இன்னல்களைச் சந்தித்து வரும் மக்கள், கட்டண உயர்வால் கூடுதல் பாதிப்பைச் சந்திக்கும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையிலேயே பேருந்தின் அதிக கட்டணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் ஹிமாச்சல அரசு தனித்துவமான நடவடிக்கையில் களமிறங்கியிருக்கின்றது.

பேருந்து கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக அம்மாநில அரசு புதிதாக செல்போன் செயலி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த செயலி தினசரி உயரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வைப் பொருத்து பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும். இதன் மூலம் தனியார் பேருந்து கட்டணத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

இதுகுறித்து அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் கூறியதாவது, "பேருந்தை கட்டணத்தை தானாக நிர்ணயிக்கின்ற ஓர் ஆப்பினை அரசு உருவாக்கி வருகின்றது. அது, பெட்ரோல் மற்றும் டீசல் விலையுயர்வுக்கு ஏற்ப பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்கும்" என தெரிவித்தார்.

இதற்கான உத்தரவு போக்குவரத்து இயக்குநர் ஜேஎம் பதானியாவிடம் ஒப்படைக்கப்பட்டநிலையில், மென் பொருள் உருவாக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது. சமீபத்தில்தான், ஹிமாச்சலத்தில் 25 சதவீத பேருந்து கட்டணம் உயர்வு செய்யப்பட்டது.

மாநில அரசின் இந்த நடவடிக்கை எதிர்கட்சியின் மிகப்பெரிய விமர்சனத்திற்கு ஆளானது. மேலும், மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனால், இதற்கு ஆளும் அரசோ தங்களுக்கு முன்னாள் ஆண்ட வீரபத்ரா சிங் தலைமையிலான கங்கிரஸ் ஆட்சியே முழுக் காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து வருகின்றது.

அதாவது, முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட மோசமான நிதிநிலையே தற்போதையப் பேருந்து கட்டண உயர்விற்கு காரணம் என கூறி தப்பிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.

அரசின் இந்த போக்கு மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையிலேயே பேருந்து கட்டணத்தைத் தானாக நிர்ணயிக்கும் ஸ்மார்ட் போன் செயலியை ஹிமாச்சல அரசு உருவாக்க திட்டமிட்டுள்ளது.

அதேசமயம், அரசின் கட்டண உயர்விற்கு கொரோனாவால் ஏற்பட்ட இழப்பே காரணம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊரடங்கால் கடந்த ஏப்ரல் மற்ரும் மே மாதத்தில் மட்டும் 166 கோடி ரூபாய் இழப்பு எச்ஆர்டிசி-க்கு ஏற்பட்டிருக்கின்றது. இதனைச் சமாளிக்கவே அரசு 25 சதவீத கட்டணத்தை உயர்த்தியது.

தற்போது லேசான தளர்வுகள் காரணமாக மாநிலம் முழுக்க குறைந்தபட்ச பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, அந்த மாநிலத்தில் உள்ள 2,700 வழித் தடங்களில் தற்போது வெறும் 1,500 தடங்களில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. விரைவில் மாநிலம் முழுவதும் பேருந்தை இயக்கவும் அம்மாநில அரசு திட்டமிட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications








